“அப்பால் ஒரு நிலம்” பார்தீபன்

  • apaalஊர்ப்பக்கத்தில் ஒரு வழமை யாராவது வெளியிடங்களுக்கு சென்றுவந்தால் அவரிடம் அவ்விடத்துப்புதினங்களை ஆவலாக கேட்டு அறிவது அல்லது போனால் அவர் சொல்லும் கதைகளைகேட்டு அவரை காணா ஒருவர் எங்களை காணும்போது, அந்தக்கதைகளை பரிமாறுவது, அக்கதைகள்பற்றி வியாக்கியானம் செய்வது இது இயல்பாக எங்களுக்குள் ஊறி உறைந்துள்ள ஒரு பண்பே இப்பண்பே கால ஓட்டத்தில் ஒரு தேடலை ஒரு பயணத்தை தூண்டிவிடும் என்பதில் எமக்கு எந்த முரணும் இருக்கப்போவதில்லை. அதனால் அப்பால் ஒரு நிலம் என்ற பிரதியினூடான என் பயணத்தின் மனக் கனதியை உங்களுக்குள் இறக்கிவைப்பது என் மனக்கனதிசற்று இலகுவாக்கும் என்று நினைக்கின்றேன்.

    பொதுவாகவே நாங்கள் ஒரு பிரதியை வாசிப்புக்குள்ளாக்கும்போது எமக்கான அரசியல்பார்வையை அப்பிரதியின்மீது கேள்விகளாக தொடுத்துக்கொண்டே பயணிக்கிறோம் அது எத்தன்மையில் அப்பிரதிக்குள் ஊடாடும் மெய்யை எமக்கு காட்டிவிடும் என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. வாசிப்பு என்பது பிரதிக்குள்ளால் ஒரு கற்கையை நாம் பெற்று பின் அக்கற்கைமீது கேள்விகளை தொடுத்து தெளிவை ஏற்படுத்தி கொள்ளுதல் என்பதாக இருக்கவேண்டும் என்று நான் உணருகிறேன். “உனக்குச் சொல்லவில்லையா உன்னவள்?” என்ற கேள்வியோடு நாவல் முடிவடைகின்றது. ஏன் அவ்வாறு நாவலாசிரியர் கதையை முடிக்கின்றார் என்ற கேள்வியை முன்வைப்போமானால் காரண காரியங்கள் எழுத்துவடிவில் சுரந்து கண்முன் ஒரு பெறுமானமுள்ள பிரதியை அடையாளப்படுத்தத்தான் செய்யும். அப் பெறுமானம் கண்முன் காட்சிப்படுத்திப்போகும் தருணம் இந்த பிரதியின் மீதான பூரண வாசிப்பாகவே இருக்க முடியும்.

    போர் என்பது எந்த இடத்தில் நடந்தாலும் உயிர்களை பலி எடுக்க எந்தவகையிலும் தயங்கியதில்லை.அவ்வாறான சூழலை எதிர்கொள்ளும் மனிதருக்கிடையில எத்தனையோ ஆயிரம் கதைகள் உழண்டு கொண்டு இருக்கத்தான் செய்கின்றது ஆனாலும் போருக்கான காரணங்களும் காரியங்களும் நாளாந்தம் புதிது புதிதாக தோன்றத்தான் செய்கின்றது. தமிழ் சமூகத்தை சிதறடித்த 21ம் நூற்றாண்டின் பெரும்போர் எத்தனையோ மெய்க் கதைகளை தனக்குள் சுரந்துகொண்டுதான் இருக்கின்றது அந்தவகையில் ‘அப்பால் ஒரு நிலம்’ காட்சிப்படுத்துவது ஒரு புள்ளிப்பொறுமானமே அதனுடாக கேட்கப்படும் கேள்விகள், விதிகள் உடைக்கப்பட்ட படிப்பினை ஒன்றைத் தோற்று விக்கும் என்பது காலம்கடந்த தேடலுக்கு தெரிந்திருக்கும் இலக்கிய அழகியல் ஆய்வுகள்.அரசியல்பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க அப்பால் ஒரு நிலத்தின் கதை சொல்லி தன் கதையை சொல்வதற்காக இரண்டு கதைமாந்தர்களை உருவாக்கியுள்ளார் மணி வீரா எனும் புனைபெயர்களோடு விடுதலைப்புலியின் வேவுப்புலி உறுப்பினர்களாக கதைக்குள் வருகின்றார்கள். பொதுவாக புலி வீரர்களின் சாகசங்களையும் வீரதீர செயல்களையும் ஒளி ,ஒலி ஊடகங்களூடாக பார்த்து கேட்டு பழக்கப்பட்ட எமக்கு.கதையின் ஊடகா வருவது, அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்வதான உணர்வு உள்ளூறுகின்றது.அதுவும் குணாகவியழகன் எழுதும்போது கையாளும் மொழிஉத்தி அக்காட்சிகளை படம் காட்டி நிற்கின்றது.என்று சொன்னால் கூடப்பொருந்தாது.சம்பவ இடத்திற்கு என்னைக் கூட்டிச்சென்றது என்றால் மிகையல்ல.

    மணி அனுபவம் வாய்ந்த வேவுப்புலி வீரனாக ஒரு அணிக்கு பொறுப்பாளனாக இருக்கின்றான். இந்த சூழலில் இராணுவத்தினரால் ஏ 9பாதை இனணக்கும் இராணுவ நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஏ9 பாதை இணைத்து விட்டால்.போர் முடிந்துவிடும் நிலை வந்து விடக்கூடிய சூழலில் கிளிநொச்சி மீதான வலிந்து தாக்குதலுக்கு புலிகள் தயாராகின்றார்கள் அப்படைநகர்வுகாக வேவு அசியமாகின்றது. மணியின் அணியில் இருந்து வேவுக்குபோனவர்கள் வீரச்சாவடையவே.அந்த அணியின் புதிய உறுப்பினராக வீரா இணைகின்றார். வேவு என்பது போரின் அதி அவசியமானதும் நம்பிக்கையானதுமாகப் பாக்கப்படுகின்றது.வேவுப்படையணிக்கு இணைப்பவர்கள் நம்பிக்கையானவர்களாகவும் அனுபவம்மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும் ஆனால் வீரா ஒரு இளம் நிலைப்போராளி ஆனாலும் அவரின் போராட்ட அனுபவம் அவரை வேவுப்போராளியாக உள்வாங்குவதற்கான காரணத்தை கதைக்குள் கதையாசிரியர் மிகத் தெளிவாக ஒளிபோட்டுக்காட்டியுள்ளார். மணி கதைக்குள் அனுபவமான வேவுக்காரணாகவும். ஒரு அணியின் பொறுப்பாளராகவும் .வருகின்றார்.

    நான் இந் நாவலின் பிரதான பாத்திரங்கள் இரண்டினதும் தொடு நிலையையே குறிப்பிட்டுள்ளேன் அது இந் நாவலை உங்களுக்கு அறிமுகப்படுத்தாது என்பதையும் நன்கு அறிவேன். விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டபெரும் வெற்றிப்போர்களில் ஜெசிக்குறு நடவடிக்கை குறிப்பிடத்தக்கதும்.பெருமை பேசவைத்ததுமானதுஎன்பதை யாரும் மறுக்கார்.இச் சமரில் போராளிகளைகாட்டிலும் மக்களின்.பங்கு புலிகளுக்கு பெரும் பலத்தைகொடுத்ததுஎன்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அச்சமரின் சம்பவம் நாவல். கதைமாந்தர்களுக்கு பின்னால் வலியை காவிவந்த மக்களின் பாடு காட்சிப்படுத்தப்படுகின்றது. போராளிகளின் மனக்கோலங்கள்.விடுதலையின் மீதான தேவை,அவர்கள் விடா முயற்சி. என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,அது உங்களுக்கு சலிப்பில் ஆழ்த்திவிடும் என்பதால் எந்த ஒப்பீட்டையும் அப்பால் ஒரு நிலம் என்ற போர்க்கதை பிரதி மீது முன்வைக்கேன். அதனால் பிரதிவாசிப்பின்போது என்னை ஈர்த்த பகுதிகளை தருகிறேன்.

    “அக்கா செத்தோடன உணர்ச்சிவசப்பட்டுப்போனாய் சரி,இப்ப நாங்கள் இடம்பெயர்ந்து அலையிறம் தங்கச்சிய ஒருக்கா யோசிச்சு பார்…இவளையாச்சும் படிப்பிச்சு ஒரு ஆளாக்கிடவேணும் என்ர கனவில என்ன இடிவந்து விழுமோ எண்டு நித்திரை இல்லாமல் தவிக்கிறன்”அவள் கண்ணீர்விட்டாள்.கழுத்தின் கீழ் எலும்பு இரு கோடாய் துருத்தியது”.

    “மனிதமனம் எப்போதுநித்தியத்துவத்தையே அவாவுகிறது. சர்வ நித்தியத்துவுத்தை! துப்பாக்கி தூக்கினால் மட்டும் இந்த மனதின் நியதியை விட்டு விலக முடியுமா விடுதலை கொள்ளமுடியுமா?”

    “தனக்கு ஒருவர் மீதுள்ள கோபத்தை மாற்றவர் தீர்த்துக் கொள்ளும்போது ஒரு ஆசுவாசம் உருவாகிறது.தவிரவும் தீர்த்துக் கொண்டவரைத் தன் தலைவனாக ஏற்றக்கொள்ள மனம் இசைந்து விடுகிறது “

    “போராளி போராளி தானே ? முன்நாள் என்ன பின்நாள் என்ன?அவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர். ஆனாலும் இன்று அவர் போராளிதான் உங்களுக்கு பாரமாக இல்லாமல் அவர் விலகி வந்து தன் பாட்டை தானே கவனிக்கிறார்”

    “நெஞ்சுக்குழிக்குள் இதையம் முன்னரிலும் உக்கிரமாய்ப் படபடக்கிறது நெஞ்சுச் சுவர்களை அது முட்டி இடிக்கின்றது கொண்டுவந்த தகவல் கையில் இருக்கிறது.மறு கையில் வீரன் இருக்கிறான்.பின்னால் இராணுவம் இருக்கின்றது.இராணுவம் தன் நிலைகளைத் தாண்டி வரப்போவதும் இல்லை.ஆனால் தாக்காமல் இருக்கவேண்டுமே…துப்பாக்கிச்சூட்டினால் முடியாது போனாலும் செல் தாக்குதல்,விமானத்தாக்குதல் என எதுவாயினும் நடத்தக்கூடும்”

    அப்பால் ஒரு நிலத்தில் பிடித்த பகுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வாறு போனால் நாவலின் முழுவதையும் சொல்லிவிடுவதாகப் போய்விடும். மேற் சொன்ன விடையங்களைத்தாண்டவேண்டுமானால் பிரதியை முழு வாசிப்புக்கு உட்படுத்தலே சாலச்சிறந்தது.

Copyright © 2092 Mukadu · All rights reserved · designed by Speed IT net