iraasambanthan-450x276

தமிழர் விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்ளின் நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம் அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. குறுகிய கால எல்லைக்குள் நாட்டில் ஜனநாயகம் நிலவியுள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது.

தேர்தல்கள் நடந்துவிட்டால் ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருதவும் முடியாது.தேர்தல்கள் நடைபெறுவது, ஜனநாயகத்தின் ஒரு அங்கமே. ஆனால் அது முடிவல்ல.

குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. தமது கடமையை சுதந்திரமாக செய்ததால் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

தமது கடமையின் புனித தன்மையை வெளிக்காட்டியதன் நிமித்தம் அவர்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

ஜனநாயகம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும்.ஜனநாயகத்துக்குபத்திரிகை சுதந்திரம் அத்தியாவசியம்.

உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பாரிய பங்களிப்பாக இருந்துள்ளது. அவற்றினை அழிக்க முடியாது.

எனவே, எமது விடுதலைப் போராட்டம் விரைவில் கௌரவமான நிலைக்கு வரும் என நினைக்கின்றோம்.அவ்வாறான நிலமை ஏற்படுகின்ற பொழுது, உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும்.

இந்த நிகழ்வை நடாத்தும் இந்த கட்டிடமும் ஒரு சரித்திரம் மிக்க கட்டிடமாகும்.ஆசியாவிலே சிறந்த நூலகமாக விளங்கிய ஒரு நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. இது வன்முறையின் உச்சக்கட்டமாகும்.

இவைகள் அனைத்திற்கும் மத்தியில் எமது மக்கள் சலிக்காமல் உறுதியுடன் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும். கிடைக்க வேண்டுமென்றும் உறுதியளிக்கின்றோம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net