பேரினவாத ஜேவிபியும் முதலைக் கண்ணீரும்..வேலன்

தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள்.
ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் விலாங்கு மீன் அரசியலை வெளிப்படுத்துகின்றது.
ஜேவிபி மீதான கேள்வி என்பது —
சுயநிர்ணயத்தை அவர் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பிரகடனப்படுத்துவாரா?? அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க சுதந்திரமான வாக்கெடுப்பை நடத்த போராடுவார்களா??
அதனை தெற்கில் பிரச்சாரம் செய்வாரா?? நல்லிணக்கம் என்பது உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகதான் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?
இந்தக் கேள்வியை மீளவும் இவர்களிடம் திரும்பத்திரும்ப கேட்கவேண்டிய தேவை என்ன இருக்கின்றது? அல்லது இவர்களின் மீதான காழ்புணர்ச்சின் மீது இந்தக் கேள்விகள் கட்டமைக்கப்படுகின்றதா?? இவர்களின் மீதான இந்தக் கேள்வி என்பது வலதுசாரிகளுக்கு உரித்தானதா? இவ்வாறு கேள்வி வைப்பதன் ஊடாகவே தேசிய வெறியராக இருக்க முடியுமா?
ஒரு வரிப் பதில் தான் தேசிய இனங்கள் தேசத்தைக் கொண்ட பண்பைக் கொண்டு வளரும் அங்கு தேசிய இனப்பிரச்சனை உருவாகின்றது என்ற மார்க்சிய அடிப்படை அறிவு தேவையானது.
இலங்கையில் ஒரு பக்கத்தில் தேசிய இனம் தனது உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் தென்னிலங்கை ஆட்சியில் (சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்டு) மகிந்த அமைச்சரவையில் பங்கு பற்றி சிங்கள மக்கள் உட்பட அனைத்து சமூகத்தையும் ஒடுக்க துணைபோனவர்கள் தான். ஆட்சியில் பங்கு கொண்டதால் அரசு என்பதே ஒடுக்குமுறை நிறுவனவடிவம் இல்லை என்றும் வாதிடுவார்கள்.
இவர்கள் தான்.
முள்ளிவாய்க்காலில் பதுங்கு குழி அமைத்து கொடுத்தவர்கள் இவர்கள் தானே. ஒன்றும் தெரியாதமாதிரி போலி இடதுசாரியம் எடுபடாது. எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இதுதானா முக்கிய பிரச்சனையாகத் தெரிகின்றது. இது இனவாதம் கோசத்தினை பேசிக் கொண்டு உழைப்பாளிகளை பிரிப்பதாக கடந்த 40 வருடங்களாக இதைத் தான் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தை எந்தக் காலத்திலும் முன்னெடுத்ததில்லை. இவர்கள் அடையாள- பொருளாதாரவாத போராட்ட முறையினுள் இருந்து கொண்டு வெளிப்படும் அரசியல் என்பது சமூகத்தினை முன்னோக்கிச் சென்றடைய விடாது. தேசிய இனங்களுக்கிடையேயான ஐக்கியம் என்ற தேன் ஒழுகும் வார்த்தையை உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஜேவிபி உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் அரசியலையும், ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு இங்கு பார்ப்போம்.
–‘‘இன்று தென்னிலங்கையில் உள்ள அரசியல் நிலைமையில் இதுதான் சாத்தியம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணக்கூடிய வழியும் இதுதான் இதை விடுத்து சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் ஏற்றி வைகுந்தம் காட்டுகிறொம் என்பது போன்றது. ‘‘‘‘–
——நாங்கள் லெனின் வாதத்தினை ஏற்றுக் கொள்கிறோம். தேசிய இனங்களுக்கான சுய நிர்ணயத்தினையும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இன்றைய காலத்தில் முதலாளித்துவ சமுதாயத்தில்,ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பேசப் படுகின்ற சுய நிர்ணயத்தினை நிராகரிக்கின்றோம்.
ஒரு காலத்தில் சிங்களவர்களும் எம்மைப் போன்று மேல் நாடு, கீழ் நாடென்று பிரிந்தே காணப்பட்டனர். பின்னர் அவர்களாகவே ஒன்று சேர்ந்தனர். அதே போன்று, இந்திய இலங்கைத் தமிழர்கள் ஒன்று சேராமல், தேசிய இனம் என்ற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. காரணம் பேசும் மொழி, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வணங்கும் தெய்வங்கள் என்பன ஒன்றாகவே காணப்படுகின்றன. மாறாக, அவர்கள் வேறு நாங்கள் வேறு என்று நாங்கள் பேச முன்வரும் பட்சத்தில், எமது தற்போது எஞ்சி இருக்கும் இனமும் சிதைவடைய வாய்ப்புண்டு. ஆகவே பிரிவினைவாதம் ஒருபோதும் தீர்வாக அமையாது. முதலில் நாங்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட வேண்டும். நாம் ஒரு சோஷலிச நாட்டினைக் கட்டி எழுப்புவோம். இன்று எழும் சந்தேகங்கள் பல எமக்கு சோசலிசத்தின் கீழ் தாமாகவே தீரும். —
நீங்கள் சொல்வது போல பார்த்தால், எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழ் இனமும், மேம் மேலும் சிதவடையவே வழிவகுக்கின்றது. இது ஒருபோதும் சமூக விருத்தியை நோக்கிச் செல்லாது. தமது கட்சியை நாடாத்திச் செல்லகூட உறுப்பினர்களை உள்வாங்கும் சக்தியற்ற வெறும் எட்டுச் சுரக்காயான பழைய இடது சாரிகள் எனச் சொல்லப் படுபவர்களை நாம் சந்தர்ப்பவாதிகளாகவே கருதுகிறோம். காலம் விரைவில் பதில் சொல்லும். முப்பு எம்மைச் செவி மடுக்க மறுத்தவர்கள், இன்று செவி மடுக்கின்றனர். இன்று மறுத்தவர்கள், நாளை மறுப்பார்கள்.—–
== நீங்கள் பக்கம் பக்கமாக எழுதலாம், தமிழரை, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கலாம். சுய நிர்ணயம் என்ற காரணத்தினால் மட்டும் சந்தர்ப்பவாத இடதுசாரியாக மாறியிருக்கலாம். எனினும் நாம் அவ்வாறானவர்கள் அல்ல. லங்கா/இலங்கை என்பதே தமிழ் பெயர் என்பதும், முழு இலங்கையையும் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததும், பிரித்தானியார் வரும்போது கிழக்கு மாகாணமும் அதில் வாழ்ந்த தமிழர்களும் கண்டி இராச்சியத்தின் கீழ் வாழ்ந்ததும், கண்டியை பல தமிழ் மன்னர்கள் ஆண்டதும், கண்டிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழில் கையொப்பங்கள் இடப்பட்டமையும் வரலாறு. உங்களது செயற்பாடு ஆண்ட யாழ்ப்பாணத்து மேட்டுக் குடியினர் ஆள வேண்டும் என்பதனையே இங்கு மறைமுகமாகக் காட்டுகிறது. நான்றாகக் குழம்பிப் போய் உள்ளீர்கள். பிரயோகம் இல்லாத அறிவு சூனியம் என்ற பொன்மொழி செயல் மூலம் காட்டப் படுகிறது.—–
மேற்கண்ட கூற்றுக்கள் ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு
===============
1. வரலாற்றை முறையாக கற்றுக் கொள்ளாமை
2. விடயங்களை அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது பொத்தாம் பொதுவாக முத்திரை குத்திவிட்டுச் செல்வது
3. மீளாய்வு, விடயங்களை கற்றுக் கொள்ளல் தீர்தூக்குதல், அறிவியல் ரீதியாக சிந்திப்பதை உதாசீனம் செய்வது. எதனையும் கேள்விக்கு உட்படுத்தாது வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப கோட்பாடு மாற்றங்களை ஏற்க மறுப்பது.
4. வழமையாக தேசம் -தேசிய இனம் பற்றிய தெளிவான பார்வையின்மை. இதனால் மலையாளிகளும் புட்டும், சொதியும் வைக்கின்றார்கள். அதேபோல தமிழர்களும் செய்கின்றார்கள். எனவே அவர்களை தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்கின்ற அபர்த்தவாதம் முன்வைக்கப்படுகின்றது.
நடைமுறைசாத்தியத்தையும் ,கடந்தகால அனுபவத்தையும் — சாத்தியவாதமும், அனுபவவாதமும் மார்க்சியம் இல்லை. அது வெறும் அகவுணர்வுசார்ந்த கருத்துமுதல்வாதமாகும். —–சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் —– இது அதனை விட மோசமான பிற்போக்கு கருத்துமுதல்வாதல் வாந்தி.
சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும்.
எச்சியிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கின்ற போது அங்கு பிரச்சனை இருக்கின்றது என்பது தானே அர்த்தம் இவற்றை உள்வாங்க மறுக்கும் சிந்தனை வடிவம் தான் என்ன?
=============
சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாக பார்ப்பதே அபர்த்தமான கருத்து என்பது மாத்திரம் அல்ல. லெனின் முன்வைக்கின்ற வர்க்க வளர்ச்சிப் போக்கில் தேசிய இயக்கம் எவ்வாறு தோன்றுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளாத ‘‘பாரம்பாரி இடதுசாரிகள் ‘‘‘ போல இனவாத ஜேவிபி உள்ளதில் ஆச்சரிப்படத்தேவையில்லை.
மலையகமும் ஜேவிபியும்
குமாரவின் கடைந்தெடுத்த அயோக்கிய கருத்து என்னவெனில் மலையத்தமிழர்களை இந்திய தமிழர்கள் என்று அழைக்க வேண்டுமா என்று 2016 இல் கேட்பது. இது ஆச்சரியம் இல்லை நாம் ஜிஜி யை திட்டியுள்ளோம். அதனை விட ஜேவிபி மலையக மக்களை கூட்டாக தண்டித்தது அதாவது 5ம் படையாக வரையறுத்து அவர்களை துரோகியாக்கினார்கள்.
ஆனால் தமிழர் தேசத்தின் போராட்டத்தின் ஆரம்பத்தில் போராளிகள் சிவக்குமார், நாபா போன்றவர்கள் 1973களில் மலையகம் சென்று அங்கு வாழ்ந்து அவர்களின் உரிமை பற்றி கரிசனை கொண்டார்கள். சுமர் 40 வருடங்களுக்கு முன்னரே இந்திய வம்சாவளி மக்களை ““மலையக மக்கள்““ என்று ஜனநாயக பூர்வமாக வரையறுத்துள்ளது.
அந்த வரலாற்றை மறைத்துக் கொண்டு இன்றுதான் நித்திரையில் இருந்து எழும்பியுள்ளார்கள். இவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக கலத்தல் (assimilation) செய்வதே அவர்களின் நோக்காக உள்ளது. இதே போல அரசியலில் பதின்ம வயது கொண்டவர்கள் பேரினவாதத்திற்கு துணைபோகும் கருத்தை விதைக்கின்றார்கள். மக்கள் முட்டாள் என்று நிறுவுகின்றார்கள். தனிமனித தெரிவும் மக்களின் கூட்டு உரிமையும் ஒன்றல்ல. மலையக மக்கள் எங்கும் சென்று வாழ முடியும், தெரிவு உள்ளது என்பது கூட்டு அரசியல் உரிமையாகாது.
ஒரு பிரசை எங்கு வேண்டுமென்றாலும் போய் வாழலாம், எவர் எந்த மூலையிலும் இருக்கலாம் என்பதை கபடமாக முன்வைக்கின்றது. ஆம் நிச்சயம் தனிமனிதர்களாக எங்கும் சென்று வாழ முடியும். இங்கு தனிமனிதர்களின் தெரிவும் திட்டமிட்ட கூட்டுக் குடியேற்றமும் ஒன்று என்ற தட்டையான புரிதலை முன்வைக்கின்றது. ஆம் இஸ்ரேல் குடியேற்றவாதிகள் இஸ்ரேல் – பலஸ்தீனம் ஆகியவை தமது மண் என்று யூதர்கள் குடியேற்றத்தை ஏற்றுக் கொள்வதை பலஸ்தீனர்கள் ஏற்றுக் கொள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். இங்கு திட்டமிட்ட குடியேற்றங்கள் கல்லோயா திட்டம் தொடக்கம் கிழக்குமாகாணம், வன்னிப் பகுதியில் செய்து வரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என்பது ஒடுக்கும் தேசிய இனங்கள் எவையும் சிங்கள தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து தமது அடையாளங்களை திணிக்கவில்லை.
இவர்கள் தேசிய இனம் என்றால் என்ன? அது எவ்வாறு தேசமாக வளரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் மலையக மக்கள் என்ற அடையாளத்தை அழிப்பதன் ஊடாக (assimilation) இல்லாதாக்கல்- ஒன்று கலத்தல் அரசியலைச் செய்கின்றார்கள். இங்கு வர்க்கம் கடந்து ஒன்று கலத்தல் என்பது உரிமையை உறுதி செய்யப்பட்டு வாழ்வதன் ஊடாகவே இருக்கும். இங்கு வர்க்கம் கடந்த ஒன்று கலத்தல் என்பதை இல்லாதாக்கல் செய்வது என்று விளங்கிக் கொண்டு அதனை பேரினவாதத்திற்கு இணையாக செயற்படுகின்றார்கள். இந்த வகையில் தான் மலையக மக்கள் பற்றிய ஜேவிபியின் கருத்தாகும்
குமாரவின் அப்பாவி போல் நடித்த கேள்வி என்பது 1949 விட படுபாதாளத்திற்கு அவர்களை கொண்டு செல்லும் அரசியல். அதில் தேசம் – என்பது லங்கா சிங்கள பௌத்த மக்களை குறிக்கும் பண்பைப் கொண்டதாகவும் அதில மற்றையவர்கள் சிறுபான்மை என்ற அபர்த்த அரசியல். இதில் வாழ்ந்த பூமியை சொந்தமாக்கக் கூடாது என்று கருத்துருவாக்கம். மலையக தமிழ் மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொள்வதும் காவல்துறை- காணி- சிவில் நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது. இதே போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழர் சிறுபான்மை என்பது எண்கணக்கில் கொள்ளும் மார்க்சிய இயங்கியல் மறுப்பு என்பது பொதுவான போக்காக இலங்கையில் இருக்கின்றது. இங்கு தமிழர் தேசத்தினை எண்கணக்கில் சிறுபான்மை என்று வரையறுக்கும் அரசியல் அபர்த்தமும் இலங்கையில் உண்டு.
சிங்கள தேசம் என்ற ஒற்றைத் தேசியத்தினுள் மற்றவர்கள் சிறுபான்மை என்று பெருந்தேசியவாதிகள் தொடக்கம் ”பாரம்பரிய இடதுசாரிகள்‘‘‘ இனவாத இடதுசாரிகள், பேரிவாதிகள் இலங்கையர் என்ற தேசியத்தை முன்வைக்கின்றார்கள்.
(பலஸ்தீனமானது ஒரு தேசமாக ஏற்றுக் கொள்ளாது அதனை அழிக்கும் இஸ்ரேலின் செயற்பாடுகளை தமிழர் தேசத்தில் பொருத்திப் பாருங்கள் விடயங்கள் விளங்ககும்)
சோவியத் ஒன்றியத்தில் சுயநிர்ணயம் பெற்ற தேசங்கள் பல இருந்தது. அந்த தேசங்கள் பின்னர் சோவியத் உடைவின் பின்னர் இரத்தக் களரி இல்லாது தனித்துச் சென்றதை இங்கு கவனிக்க வேண்டும். சோவியத் காலத்தில் தான் ஒன்று கலத்தல் என்பது உயர்ந்த ஜனநாயக வடிவமாக இருந்துள்ளது. குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாது இன, குல, மத பேதமற்ற மக்களாக ஒன்றிணைவோம் என்பது பேரினவாதக் கூற்றேயாகும்.
ஒரு சிறுபான்மை தேசிய இனத்தை இல்லாக்குவதன் ஊடாக அவர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கான காணியுரிமை, பொருளாதாரத்தில் தெரிவற்ற வகையில் தொடர்ந்தும் லயத்தின் அடிமைகளாக வைக்க முடியும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு விடயங்களில் சலுகையை மாத்திரம் பெற்றுக் கொண்டிருக்க முடியும். இதனை முதலில் மனோ தொடங்கி வைத்தார். குமார அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றார். உரிமைகளை உறுதி செய்வதற்குப் பதிலாக அவர்களின் அடையாளம் தான் முக்கியமானதாக இவர்களுக்கு இருப்பதன் சூட்சமம் என்னவாக இருக்கின்றது என்பதை அறிய பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டியதி்ல்லை.
===========================================
மேலும் வாசித்து அறிய

http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/…

http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/…

http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/…

http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/…

https://www.youtube.com/watch?v=o-q…

https://www.facebook.com/ramalingam…

Copyright © 5853 Mukadu · All rights reserved · designed by Speed IT net