2ஆம் இணைப்பு – ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி : “அல்லும் பகலும் உழைப்பேன்”

2ஆம் இணைப்பு – ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி : “அல்லும் பகலும் உழைப்பேன்”
jayalalitha jayaram_CI
1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியிலிருந்த கட்சியையே மீண்டும் தேர்வுசெய்திருக்கும் தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கப் போவதாக தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

download (18)
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க. 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள நிறைவேற்றப்போவதாகவும் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக்கப்போவதாகவும் அதற்காக அல்லும் பகலும் பாடுபடப் போவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இதுவென்றும் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய தேர்தல் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே தொடர்ந்து வெற்றிபெறும் பெருமையைத் தனக்குத் தந்திருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக முன்னிலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நண்பகல் 12 மணி நிலவரப்படி அ.தி.மு.க. 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தி.மு.க. 86 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.

நரேந்திர மோடி வாழ்த்து

அதிமுக, 130க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னதாக முதல்வரை தொலைபேசியில் அழைத்து, தனது வாழ்த்துக்களைக் கூறியதாக ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்

தமிழகத்தின் 234 தொகுதிகளில், அ.தி.மு.க அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது..

தமிழகத்தின் 234 தொகுதிகளில், அ.தி.மு.க அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.. அதன் அடிப்படையில் அ.தி.மு.க வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது நிலையிலும், பா.ம.க மிகக்குறைந்த தொகுதிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் தலைமையிலான தே.தி.மு.க அதனுடன் இணைந்த மக்கள் நலக் கூட்டணி வரலாறு காணாத வகையில் பாரிய சரிவைக் கண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 41ஆயிரத்து 990 வாக்குகள் நோட்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடர்கின்றன. அதில், காங்கிரஸ் என்.அர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றன. 2,415 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி உள்ளன.

கேரளா சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மிகக் கூடிய இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளா மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்ற உள்ளனர். ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை இழக்கிறது.

அசாமில் 126 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. 11 மணியளவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தேவையான இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. அசாமில் மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அதேபோல பாஜக, அசோம் கண பரிஷத், போடோ மக்கள் பிரன்ட் ஆகிய கட்சிகள் இணைந்து களம் கண்டன.

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக ப்ரன்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக களம் கண்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 199 இடங்களில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு மோடி அலை அடங்கிவிட்டது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 10 மணி நிலவரப்படி 199 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 41 இடங்களிலும், இடதுசாரிகள் 38 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

download (19)

வெள்ள பாதிப்புக்கு பதிலடி கொடுத்ததா சென்னை? பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை

வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகள் திமுக பக்கம் செல்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு பல மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மக்களை ஈர்க்கும் வகையிலான விளம்பரங்களை திமுக வெளியிட்டது.

திமுகவின் வியூகத்திற்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி, சென்னையிலுள்ள 16 தொகுதிகளில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது. அண்ணாநகர், ஆயிரம் விளக்கு போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் தோல்வி முகத்தில் உள்ளனர். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை வகித்தாலும், வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. திமுகவின் கோட்டை என்று முன்பு சென்னை வர்ணிக்கப்படும். ஆனால், கடந்த தேர்தலில் அது முற்றிலும் மாறியது. சூழல் மாறுவது தெரிந்துதான், சேப்பாக்கம் தொகுதியை தவிர்த்து, தனது சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆரம்பித்தார் கருணாநிதி. ஆனால், இம்முறை திமுகவின் கோட்டையாக தலைநகரம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: முக்கிய தலைவர்களின் முன்னணி நிலவரம்

இன்று காலை துவங்கிய தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் முன்னிலையும், பின்னடைவும் தெரியவந்துள்ளது.

தமிழக முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

இதே போல் திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முறையே திருவாரூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்தங்கி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: முக்கிய தலைவர்களின் முன்னணி நிலவரம்

ஜெயலலிதா ராதாகிருஷ்ணன் நகர் முன்னிலை
கருணாநிதி திருவாரூர் முன்னிலை
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் முன்னிலை
அன்புமணி பெண்ணாகரம் பின்னடைவு
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை பின்னடைவு
திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் (தனி) பின்னடைவு
சீமான் கடலூர் பின்னடைவு
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net