தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது..கவிப்பேரரசு வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும்
வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
சூளுரைத்த பாட்டு – கடல்
உள்வாங்கிப் போனதடா
உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
கால்களுக்கும் வணக்கம்

p6aa7.jpgசதுராடிக் களம்கண்ட
சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
ஆராய வேண்டும்.

விகடன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net