தென் பிரான்சில் காளை மாடு மோதி பெண்ணொருவர் பலி!

தென் பிரான்சில் காளை மாடு மோதி பெண்ணொருவர் பலி!

தென் பிரான்சின் அய்ஜியூஸ்-மோர்ட்டஸ் நகரில் நடைபெற்ற உள்ளூர் பண்டிகை நிகழ்வொன்றில் காளை மாடொன்று மோதியதன் காரணமாக பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரழந்தார்.

கென்னஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் கடந்த சனிக்கிழமை காளை ஓட்டப் பந்தையத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

இதன்போது, பந்தயத்தில் கலந்து கொண்ட சில காளை மாடுகள் திரண்டு ஓடிய போது பார்வையாளர்கள் பகுதியை வேறுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த வேலியைத் தாண்டி பாய்ந்து சென்றுள்ளன.

அந்த தருணத்தில் வேலிக்கு அருகாமையில் இருந்து பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் காளை மாடு ஒன்றினால் தூக்கிய எறியப்பட்டார்.

காளை மாடு தனது கொம்புகளால் அந்த பெண்ணை சில மீற்றர்கள் தூக்கியெறிந்து பந்தாடியது, இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த பெண் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த பெண்ணையும், கணவரையும், மற்றும் சில பார்வையாளர்களையும் பாதுகாப்பு வேலிக்கு மிக அருகாமையில் இருந்து பந்தயத்தை பார்க்க வேண்டாம் என்று பலமுறை எச்சரித்த போதும் அதனை கவனத்தில் கொள்ளாததன் விளைவாக இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 0918 Mukadu · All rights reserved · designed by Speed IT net