பல ஆண்டுகள் கழித்து பிரபாகரன் குறித்து மனம் திறந்த யசூசி அகாசி!

பல ஆண்டுகள் கழித்து பிரபாகரன் குறித்து மனம் திறந்த யசூசி அகாசி!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனது யுத்தவெற்றிகளால் நிரம்பியிருந்தது எனவும், அவர் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் எனவும் ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு.

நாங்கள் சமாதானத்திற்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானம் குறித்து எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.

நான் அப்போது காணப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துமாறு பிரபாகரனை கடுமையாக வலியுறுத்தினேன். எனினும், பிரபாகரன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை பின்னர் நான் உணர்ந்தேன்.

எங்கள் சந்திப்பிற்கு நாங்கள் ஓன்றாக மதிய உணவருந்தினோம். அப்போது பிரபாகரன் சற்று இயல்பான நிலையில் காணப்பட்டார்.

காலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமானவையாகவும் உத்தியோகபூர்வமானவையாகவும் இருந்தன.

மதிய உணவிற்கு பின்னர் நாங்கள் உத்தியோகபூர்வமற்ற பேச்சுகளில் ஈடுபட்டோம். பிரபாகரன் தனது மகன், தனது குடும்பம், தனது எதிர்பார்ப்புகள் குறித்து குறிப்பிட்டார்.

பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை தவறவிட்டார் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் அதற்காக என்னை தொடர்புகொண்டனர். தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்தவர் என தெரிவித்து என்னை நபர் ஒருவர் தொடர்புகொண்டார்.

நான் வெறுமனே யுத்த நிறுத்தம் மாத்திரம் போதுமானதல்ல ஆயுதங்களை கைவிடவேண்டும், பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என அவரிடம் தெரிவித்தேன்.

அவர் எனது நிலைப்பாட்டை பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர் என்னை தொடர்புகொள்வதாக தெரிவித்தார் ஆனால் பின்னர் என்னைஅவர் தொடர்புகொள்ளவில்லை.

அன்றன் பாலசிங்கம், தமிழ் செல்வன், மற்றும் சர்வதேச மோதல்கள் குறித்த அனுபவமிக்கவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிற்கான வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தனர்.

எனினும் பிரபாகரனின் மனது யுத்தவெற்றிகளால் நிரம்பியிருந்தது. அவர் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என நான் நினைக்கிறேன்” என யசூசி அகாசி மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 1858 Mukadu · All rights reserved · designed by Speed IT net