மனித புதைகுழியில் தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள்

மனித புதைகுழியில் தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள்அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 106 ஆவது நாளாக இடம் பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

106 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணிகளின் போது தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் புதை குழியில் இருந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மனித புதை குழிக்கு விஜயம் செய்து பார்வையிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போது,

“இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்றைய தினம் இங்கு வருகை தந்து அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டுச் சென்றார்” என அவர் பதிலளித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net