இந்தியா, பிரித்தானியரிடம் இழந்த சொத்து மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய்!

இந்தியா, பிரித்தானியரிடம் இழந்த சொத்து மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய் – அதிரவைக்கும் அறிக்கை!

இந்தியாவை ஆட்சிசெய்த காலமான 1858- 1947 வரையான 173 ஆண்டுளில் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற சொத்துக்களின் மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய் என அறிக்கை சொல்கிறது.

இந்திய பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இந்த வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்துள்ளது.

பிரித்தானியரின் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில், நிதிப் பரிவர்த்தனை குறித்து, மிக ஆழமான ஆராய்ச்சியை உஸ்தா பட்நாயக் மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானியர்கள், இந்தியாவை ஆண்ட போது இங்கு கடுமையான வறுமை, பஞ்சம் நிலவியது. இந்த கால கட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி பிரித்தானியர் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.

1858 ஆம் ஆண்டில் இருந்து 1947 ஆம் ஆண்டு வரைக்கும் பிரித்தானியரின் கட்டுப்பாடு இருந்தது என்று கூறினாலும் 1765 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்தான் பிரித்தானியரது சுரண்டல் உச்சத்தில் இருந்தது.

இந்தியாவிலிருந்து உலகளாவிய ஏற்றுமதியாகக் கிடைத்த உபரி வருவாய் அனைத்தும் லண்டனில் இருந்த இந்தியாவிற்கான தலைமைச் செயலாளரது கணக்கிற்கு சென்றது.

பின்னர் அதிலிருந்து ஒரு குண்டு மணி தங்கமோ அல்லது நிதியோ இந்தியர்களுக்குத் திரும்ப வரவில்லை என்று ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

1946 ஆம் ஆண்டில், இந்தியா சந்தித்த தனிநபர் உணவுப் பற்றாக்குறையை, இன்றளவும் தெற்குப் பகுதிகளில் எந்த நாடும் சந்தித்ததில்லை என்று தமது ஆய்வுக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், தற்போதைய மத்திய பட்ஜெட்டின் 26 முதல் 36 சதவிகிதத்திற்கு ஈடான செல்வத்தை ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சுரண்டிச் சென்றுள்ளனர்.

இந்த சுரண்டல், இந்தியாவை மிகவும் பின் தங்கவைத்தது. இந்தியாவிலிருந்து, வெளிநாட்டிற்கு சுரண்டிக் கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் மட்டும் இங்கேயே இருந்திருந்தால் இந்தியா பொருளாதார உச்சத்தில் இருந்திருக்கும்.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற தொற்று நோய்களால் கொத்துக் கொத்தாக மடிந்தனர்.

இதன் காரணமாக, 1911 ஆம் ஆண்டுகளில், இந்தியர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 22 வயதாக இருந்தது. பிரித்தானியர்கள் இங்கிருந்து செல்லும்பொழுது உலக நாடுகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் இரண்டு சதவீதமே.

சமூகத்தை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டு இந்தியாவிடம் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு பிரித்தானியர் வெளியேறினர் என்றும் தமது அறிக்கையில் உஸ்தா பட்நாயக் சுட்டிக் காட்டியுள்ளார்.

173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடி பிரித்தானியர்கள் அள்ளிக் கொண்டு சென்ற செல்வத்தின் இன்றைய இந்திய மதிப்பு, 7,06,75,00,00,00,000 ரூபாய் ( 9.2 டிரில்லியன் யூரோ).

இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை, பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும் என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்த தமது ஆராய்ச்சிக் கட்டுரையில் உஸ்தா பட்நாயக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியரை எதிர்த்து வீர பாண்டிய கட்டபொம்மன் பேசிய வீர வசனம், திரைப்படமாக இருந்தாலும் இந்திய சுதந்திர போராட்டத்தின் வடுக்களை இன்றும் அது தாங்கி நிற்கிறது என்றால் மிகையாகாது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net