பிரபாகரனால் நிறைவேற்றமுடியாதவற்றை சுமந்திரன் நிறைவேற்றுகிறார்!

பிரபாகரனால் நிறைவேற்றமுடியாதவற்றை சுமந்திரன் நிறைவேற்றுகிறார்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆயுதத்தினால் அன்று நிறைவேற்ற முடியாதுபோன விடயங்களை, சுமந்திரன் இன்று பேனாவால் நிறைவேற்றி வருவதாக மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

மஹிந்த தரப்பினரால் கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2009ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரிவரை பயங்கரவாதம் தலைதூக்கியிருந்த வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசுகூட வெடிக்கவில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், யுத்தம் நிறைவடைந்த நிலையில் பட்டாசு வெடிக்கக்கூட அஞ்சினார்கள்.

ஆனாலும் நல்லாட்சியில் 2015 ஆண்டு ஜனவரியில் இருந்து மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் வரையில் அங்கு என்ன நடந்தது என நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆவா குழு தோற்றம் பெற்றது, வேறு சில குழுக்கள் உருவாகின. அவர்கள் தமிழ் வியாபாரிகளைத் தாக்கி, சித்திரவதை செய்து, கொலைசெய்து கொள்ளையிட்டனர்.

மாகாணசபை அமைச்சர் ஒருவர், இலங்கை தேசிய கொடியை ஏற்றமுடியாது என்றார். நாம் அப்போது, முதுகெழும்பு இருக்கும் அரசாங்கமாக இருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்.

அதன் பின்னர் பெண் அமைச்சர் ஒருவர், மீண்டும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறவேண்டும் எனக் கூறினார். விஜயகலா மகேஸ்வரன் கோரிய விடுதலைப் புலிகள் இப்பொழுது தோற்றம் பெற்றுள்ளனர்.

அன்று பொலிஸார் உறுதியாக இருந்து மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாதெனத் தடுத்தனர். இதற்காக அவர்களைப் பழிவாங்கும் வகையில் மட்டக்களப்பில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு அன்று துப்பாக்கியாலும், குண்டுகளினாலும் பிரபாகரனினால் செய்யமுடியாததை இன்று, சுமந்திரன் பேனாவினால் செய்கிறார்” என ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4359 Mukadu · All rights reserved · designed by Speed IT net