அரச நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும்!
ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் இயங்க முடியாத பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, விரைவில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அடுத்த வருட அரச செலவுகளுக்கான நிதியை நாடாளுமன்றமே ஒதுக்கவேண்டும். ஆனால் இந்த வருடம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. அதில் 16 நாட்களே நாடாளுமன்றம் இடம்பெறவுள்ளது.
ஆனால் இதுவரை அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு அடுத்த வருடத்துக்கு நிதியை ஒதுக்கப்போகின்றோம்.
அத்துடன் எதிர்வரும் 16 நாட்களுக்குள் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் இயங்க முடியாத பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
அதனால் எஞ்சியிருக்கும் சில தினங்களில் இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றையேனும் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”