நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு இன்று என்ன மரியாதை கிடைக்கும்?
பிரதமராக செயற்பட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நாடாளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழமையான ஆளும்தரப்பு ஆசனமே வழங்கப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மீண்டும் நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதற்காக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால், வாக்கெடுப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மஹிந்த ராஜபக்ஷ இன்றைய பிரதமர் ஆசனத்தில் அமர்வார்.
வாக்கெடுப்பிற்காக மாத்திரமே மஹிந்தவுக்கு இவ்வாறு ஆளும் கட்சி தரப்பில் ஆசனம் வழங்கப்படும் என நாடாளுமன்ற படைக்கலச்சேவிதர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் மஹிந்த ஆளும் கட்சி பிரிவில் ஆசனம் பெறுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.