ரணிலுக்கு நிபந்தனை விதிக்க கூட்டமைப்பு தீர்மானம்!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் இரவு 8 மணி வரை தொடர்ந்தது.
எனினும், இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கலந்துரையாடலின் போது எழுத்து மூலம் உத்தரவாதம் கோருவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவிடம் விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றில் சில விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வலுப்படுத்தல் மற்றும் வடக்கு கிழக்கை தற்காலிகமாகவேனும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூடவுள்ளது. இந்த சந்திப்பில், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.