இலங்கையில் 16 இலட்சத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்!

இலங்கையில் 16 இலட்சத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்!

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது. இந்த தொகையாக உலக சனத்தொகையில் 15 வீதமாக இருக்கின்றது. இதில் முக்கிய குழுவினர்களாக மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர்.

இலங்கையை பொறுத்த வரையில் பதினாறு இலட்சத்து பதினேழாயிரத்து தொல்லாயிரத்து இருபத்து நான்கு பேர் மாற்றுத் திறனாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பத்தொன்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பெரிய தொகையினர் எங்களுடைய சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை அரவணைத்து எமது சமூகத்திலே விசேட திறமையுடையவராக இனங்கண்டு அவர்களுக்கு தேவையானவற்றை அனைவரும் ஒன்றிணைந்து செய்து கொடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை எங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுத்திறனாகளின் திறமைகளை வெளிக்கொணர பாடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net