பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்!
தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியமைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி பொலிஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தரமணியில் 2016 மார்ச் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றியதாக உயர்நீதிமன்ற சட்டத்தரணி ராஜ்குமார் பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடொன்றினை அளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சியொன்றினையும் பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் சட்டத்தரணி ராஜ்குமார் வழங்கியிருந்தார்.
இதனை ஆராய்ந்த பின்னரே தரமணி பொலிஸார் சீமான் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீமான் மீது தரமணி பொலிஸ் நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.