அதிவேக நெடுஞ்சாலை; இலத்திரனியல் கொடுப்பனவு அட்டை அறிமுகம்.

அதிவேக நெடுஞ்சாலை; இலத்திரனியல் கொடுப்பனவு அட்டை அறிமுகம்.

அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணிப்பவர்கள் கட்டணத்தை இலகுவாகச் செலுத்தும் வகையில், இலத்திரனியல் கொடுப்பனவு அட்டைகளை (Electronic Teller Cards) விநியோகிக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை மூலம் இலத்திரனியல் ரீதியாகக் கட்டணம் அறவிடப்படுவதன் காரணமாக பயணத் தாமதத்தைக் குறைக்க முடியும் என்பதோடு, கணனி மயப்படுத்தப்பட்டுள்ள இவ்வட்டையின் மூலம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் சாரதிகளிடம் தன்னியக்க முறையில் கட்டணம் அறவிடப்பட்டு, கட்டணம் அறவிடப்படும் பகுதியில் தன்னியக்க முறையில் கதவு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்த இலத்திரனியல் கொடுப்பனவு அட்டைகளை வழங்கும் நடைமுறை, எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதிவரை அமுலிலிருக்கும் என்பதோடு, இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.exway.rda.gov.lk  எனும் முகவரியில் பதிவு செய்ய முடியும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், 1969 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாகத் தொடர்புகொள்ள முடியும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திட்டம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

Copyright © 0337 Mukadu · All rights reserved · designed by Speed IT net