வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்?

வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்?

வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.

இந்தக் கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த விடயம் சஹ்ரானின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் முதல் தாக்குதலாக வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நள்ளிரவில், பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாக்குதலாகும்.

இந்த தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடத்தப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.ஐ.டி.யினர், கொழும்பில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வவுணதீவுச் சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் திகதி) ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர், 31 வயதான கம்சா முகைதீன் இம்ரான், 34 வயதுடைய முகமது ஆசிம் சியாம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.

பின்னணி இதுதான்,

திஹாரியில் இருந்து வேலை ஒன்று இருக்கின்றது. அதற்கு ரி-56 ரக துப்பாக்கி தேவை. எனவே அதனை வந்து எடுக்குமாறு சஹ்ரான் கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்திற்கு 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கபூரிடம் ரி-56 ரக துப்பாக்கியைக் கொடுத்து அக்கரைப்பற்று – கொழும்பு பேருந்தில் கபூரை ஏற்றி அனுப்பியுள்ளார்.

காத்தான்குடிக்குச் சென்று இறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு அங்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது.

இந்தக் காரில் கபூர் ஏறி அங்கிருந்து ஒல்லிக்குளம் பகுதியில் அந்த ஆயுதத்தை கொண்டு சென்று மறைத்து வைத்திருந்துள்ளார்.

இதனிடையே உன்னிச்சை பகுதியில் கபூரின் நண்பனின் வாடி (கொட்டகை) இருக்கின்றது. அங்கு இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர், நில்கான் மற்றும் இம்ரான், சியாம் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸார் இருப்பதை அவதானித்தனர். இதனையடுத்தே இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்தனர்.

நவம்பர் 29ஆம் திகதியை தாக்குதலுக்காக தெரிவுசெய்தது ஏன்?

நவம்பர் 29ஆம் திகதி தாக்குதலை திட்டமிட்டது ஏனென்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம். அதன் பின்னர் பொலிஸாரை கொன்றால் அது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு முழு சந்தேகம் ஏற்படும்.

தெரிவு செய்யப்பட்ட திகதியில் முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் இருந்து கபூரும், நில்கானும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள்களில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் கூரிய கத்திகளையும் வைத்து அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு செல்லும்போது இடையில் காத்திருந்த இம்ரானையும் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

பதுளை வீதி ஊடாக கரடியனாறு, ஆயித்திமலை சென்று அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன் வீதியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில் வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முகமது ஆசீம் சியாம் அன்றைய தினம் மாடு ஏற்றும் லொறி ஒன்றில் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் காத்திருந்தார்.

தாக்குதல் ஆரம்பம்

அப்போது லொறியில் காத்திருந்த சியாமை சோதனைச் சாவடிக்கு அருகில் இறங்குமாறு உத்தரவிட, சியாம் இறங்கியதும் லொறி சென்றுவிட்டது.

அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸூக்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உட்பகுதில் பொலிஸ் சார்ஜன் நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.

இந்தவேளை, நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் நன்றாக இம்ரான் கதைத்துக் கொண்டிருந்த தருணத்தில் அங்கிருந்து கபூர் மற்றும் பதுங்கியிருந்த நில்கான் சோதனைச் சாவடியின் உள்ளே இருந்த இந்திக பிரசன்னாவின் முகம், கழுத்துப் பகுதியை வலையால் மூடியபோது அவர் மீது கபூர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது வெளியில் இருந்த பொலிஸ் டினேஸுக்கு சத்தம் கேட்கவே, அவர் மீதும் கத்தியால் குத்தப்பட்டது. இதனால் டினேஸ் மயங்கி விழுந்துள்ளார்.

இதன் பின்னர் நில்கான், கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் பொலிஸ் சாஜன் பிரசன்னாவை இரண்டு தடவை சுட்டுள்ளார். கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குத்தியுள்ளார்.

பின்னர் மயங்கிக் கிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸையும் கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்து றிவோல்வர் ரக கைத் துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்து ஒல்லிக்குளப்பகுதில் அமைந்திருந்த முகாமிற்கு சென்றனர்.

அங்கிருந்து பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதில் புதைத்து வைத்ததுடன் மற்ற றிவோல்வர் உட்பட 6 கைத் துப்பாக்கிகளை புத்தளம் பகுதியில் கபூர் புதைத்து வைத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மோதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அதே துப்பாக்கியை படையினர் மீட்டுள்ளனர் என சி.ஐ.டி. யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கு விசா மற்றும் விமானச் சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியதுடன் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அவர் உடனடியாக சவுதி அரோபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தற்போது, அவரை இலங்கைக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சியில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net