யார் மீதும் மொழித் திணிப்பு இடம்பெறாது!

யார் மீதும் மொழித் திணிப்பு இடம்பெறாது!

யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் முயற்சி இடம்பெறாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ள நிலையில், அதில் மும்மொழித் திட்டம் எனும் ஹிந்திமொழித் திணிப்புக்கு பல மாநிலங்களில் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,

“யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை. இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

தற்போது வெளியாகியிருப்பது வரைவு அறிக்கை மட்டுமே. மக்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இந்த வரைவுக் கொள்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.

ஹிந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net