மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதாலே தேவையற்ற பிரச்சினைகள்!

மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதாலே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன!

மதத்தலைவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுகின்ற பொழுது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

மதத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய மதம் சார்ந்த சமூகம் சார்ந்த விடயங்களை முன்னெடுத்து அந்த சமூகத்தை நல்வழிபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் இந்த நாட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மேலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போல அனைத்து மத தலைவர்களும் செயற்பட்டால் இந்த நாட்டில் என்றுமே இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் முறுகல் நிலை ஏற்படாது.

எனவே அவருடைய செயற்பாடுகள் அனைத்து மத தலைவர்களுக்கும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நுவரெலியா ஹொலி குரோஸ் பாலர் பாடசாலையில் அமைக்கப்படவுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதற்காக 18இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

இன்று இந்த நாட்டில் உண்ணாவிரம் இருந்து அனைத்து அரசியல் பிரச்சினைகளையும் தீர்த்து கொள்ள முடியும் என ஒரு சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால் அப்படி செய்ய முடியாது. எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.

பொதுவாகவே அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் மதத் தலைவர்கள் என்பவர்கள் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மக்களை நல் வழிப்படுத்துவது போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றார்கள்.

அதனால் அந்த நாடுகளில் மத ரீதியிலான முறுகல் நிலை ஏற்படுவதில்லை.

அப்படி ஏற்பட்டால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுகின்றார்கள்.

அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களை அரசியலுக்கு கொண்டு வராமல் அவர்களின் கருத்துக்களை கேட்டு நடந்தால் இந்த நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இல்லாமல் ஒரு நாளும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்.

Copyright © 8897 Mukadu · All rights reserved · designed by Speed IT net