உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 7-வது லீக் ஆட்டம் நேற்று கார்டிஃப் மைதனத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

அந்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, இலங்கை பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. திமுத் கருணாரத்னே அதிரடியாக 30 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மறுமுனையில் குஸல் பெரேரா நிலைத்து நின்று 78 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

33 ஓவர்களில் இலங்கை 182 ஓட்டங்கள் எடுத்த போது மழை பெய்தததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின்பு ஆட்டம் தொடர்ந்தது.

ஆனால் மழையின் காரணமாக கால தாமதம் ஏற்பட்டத்தால், இரண்டு தரப்பும் 50 ஓவர் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 4 விக்கெட்டும், தாஸ்லத் ஸத்ரான் மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டும், ஹமித் ஹாசன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்டத்தின் நடுவில் மழை குறுக்கிட்டதால், டக்வோர்த் லுயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது பேட்டிங் தொடங்கியது. ஆனால் இலங்கை அணியின் துல்லியமான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தடுமாறினார்கள்.

அந்த அணியில் நஜிபுல்லா ஸத்ரான் மட்டும் அதிகபட்சமாக 43(56) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து அவுட் ஆனதால், ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இலங்கை அணி டக்வோர்த் லுயிஸ் முறைப்படி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net