பிரபாகரனை யாரால் ஏற்க முடியாது?

பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தாராம்.. ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல் தனியாருக்கு தாரை வார்ப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயாகி செஞ்சோலை, அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம் என உருவாக்கி அவர்களை மீட்டெடுத்தாராம்.. ஆம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு வருந்தாதவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் பெண் விடுதலையை பேசுவதோடு நிறுத்தாமல் ஈழத்தில் வரதட்சணை இல்லாமல் செய்தாராம். புலிகள் பெண்களை கண்ணியத்தோடு பார்க்க பழக்குவாராம். பெண்களை நீதிபதியாக அமர வைத்தாராம். பெண் படையணியை புலிகளின் சாதனை என்பாராம்.. ஆம் ஒழுக்க குறைபாட்டை பெண் விடுதலையென பேசுபவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் சிங்கள ராணுவத்தின் மீதான தாக்குதலில் இரண்டு அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டதை அறிந்து தன் படை வீரர்களை மூன்று மாதம் சிறையிலடைத்தாராம்.. ஆம் வகுப்பு கலவரங்களால் அப்பாவிகளை கொன்று அரசியல் செய்பவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் தன் படை வீரர்கள் சிலர் இலங்கை ராணுவத்தினர் குடிக்கும் கள் பானையில் சையனைடு கலந்து கொன்றதை அறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினாராம். எதிரிக்கு கூட வீர மரணம் வேண்டும் என்பாராம்.. ஆம் பதவிகளுக்காக உறவுகளுக்கே விஷம் வைப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வாராம். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவாராம்.. ஆம் மக்கள் வரிப்பணத்தில் கோடிகளை செலவழித்து பாராட்டு விழா எடுப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் இரவில் ரோந்து பணியிலிருந்த வீரரின் தலையில் ஒட்டியிருந்த மார்கழி பனியை தொட்டு பார்த்து உடனடியாக அவர்களுக்கு அன்றைய இரவிற்குள் மெழுகு தொப்பிகளை வழங்கினாராம்.. ஆம் ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் கூட ஊழல் செய்தவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் தமிழீழ வங்கியமைத்து இலங்கை தீவிலே சேமிப்பிற்கு அதிகபட்ச வட்டியும், கடனுக்கு குறைந்தபட்ச வட்டியும் நிர்ணயித்து மக்களின் பொருளாதாரத்தை சீரமைத்தார்… ஆம் மக்கள் எக்கேடு கெட்டாலென்ன என்று சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்குபவர்களால் அவரை ஏற்க முடியாது.

பிரபாகரன் என் தன் இனத்திற்கான உரிமை போரில் சிறிதும் பின் வாங்காமல் ஓடி விடாமல் இறுதிவரை போராடி தன் குழந்தைகளுக்கும் வீர மரணத்தை கொடுத்து அழகு பார்த்தாராம்.. ஆம் வாரிசுகளுக்கு பதவி மட்டும் கொடுத்து அழகு பார்ப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.

அவர் தலைவர், அவர் கோட்பாட்டாளர், அவர் போராளி, அவர் ஒழுக்கசீலர். உங்களால் அவரை ஏற்க முடியாது. ஆனால் அவரின்றி என் இன வரலாறு அமையாது..!

Boopathy Murugesh

#HBDTamilTiger

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net