ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் சரண் அடைந்துள்ளனர்

tueky_CI
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு பலர் கையை மேலே தூக்கியபடி வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியுள்ளது.

தலைநகர் அங்காராவில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் இரவு முழுவதும் அங்காராவில் இருந்த பாராளுமன்றக் கட்டிடம் மீது டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தவர்கள் கடத்தியுள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தும்படி துருக்கி பிரதமர் பினாலி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சதியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களின்போது சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net