‘கோணல் மாணல்’ ஒளிவட்டு வெளியீட்டு விழாவில் இருந்து.
* அழகான, அடக்கமான மண்டபத்திலே வெளியீட்டு விழா நடந்தது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து, கலைஞர்களான நாச்சிமார் கோயிலடி ராஜன், நடிகை மரியனிட் ஆகியோர் மங்கள விளக்கேற்றினர்.
* தொடக்க உரையினை இயக்குனர் சுதன்ராஜ் நிகழ்த்தினார். ‘கோணல் மாணல்’ தொடரின் நோக்கம், அது ஒளிவட்டாக வெளியிட வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து அவர் பேசினார்.
* இதுவரை வெளியான 9 பாகங்கள் குறித்து, அதில் உள்ள வெவ்வேறு விடயங்களை அலச, 5 செயல்பாட்டாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள், இந்த நகைச்சுவைத் தொடரில் பொதிந்துள்ள சமூகக் கருத்துக்கள், பெண்ணியம், நுண் அரசியல் போன்றவை குறித்து உரையாற்றினார்கள்.
* ஒளிவட்டினை, தடம் நிறுவன தலைவர், கலைச் செயல்பாட்டாளர் குணா அண்ணா வெளியிட்டு வைக்க, ஈழத்தமிழர் திரைப்பட சங்க தலைவரும், ஊடகவியலாளருமாகிய ரொபேர்ட் அண்ணா பெற்றுக்கொண்டார்.
* தொடர்ந்து சுதன்ராஜ் அண்ணாவின் தந்தையார், மாமனார் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களை அழைக்கும் போது, உணர்ச்சி மேலீட்டில், சுதன்ராஜ் அண்ணாவின் குரல் தளதளத்தது. ‘கடந்த 20 வருடங்களாக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது. இன்றுதான் இப்படி ஒரு மேடையிலே சந்திக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.
* இதுவரை வெளியான 9 பாகங்களில், மக்களின் வரவேற்பை அதிகம் பெற்ற 8 வது பாகம் திரையிலே காண்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில், ஆகஸ்ட் 13 ம் திகதி வெளியான அந்த அங்கம், இதுவரை 7600 பார்வைகளையும் 97 பகிர்தலையும் பெற்றுக்கொண்டுள்ளது. ( மிகவும் நுட்பமான சங்கதிகளை நகைச்சுவையோடு சொல்லும் அந்த அங்கத்தினை கீழே தருகிறேன் )
* தொடர்ந்து 5 நிமிட இடைவேளை விடப்பட்டது. மரியனிட் அக்கா, தேனீரும் வடை, பனங்காய் பணியாரம் போன்ற சிற்றுண்டிகளும் வழங்கினார். பனங்காய் பணியாரத்தை எடுத்து நான் மேலும் கீழும் உருட்டி ஆராய்ச்சி செய்தபோது, பக்கத்தில் நின்ற ரொபேர்ட் அண்ணா ‘இது பனங்காய் பணியாரம் இல்லை. இது முழுக்க முழுக்க கரட்டினால் செய்யப்பட்ட ஒன்று. தமிழர்களின் புது கண்டுபிடிப்பு’ என்று விளங்கப்படுத்தினார்.
* இடைவேளை முடிந்த பின்னர், கோணல் மாணல் தொடரின் 10 ம் பாகம், முதல் முறையாக திரையில் காண்பிக்கப்பட்டது. அரங்கில் ஒரே சிரிப்பு மழை..! எமது புலம்பெயர் வாழ்வில் நாம் செய்யும் சில வேலைகளைப் போட்டு கடி கடி என்று கடித்திருக்கிறார்கள். அந்தப் பாகம் இன்னமும் வெளியாகவில்லை அல்லவா? அதனால் அது குறித்து விரிவாக எழுத முடியவில்லை..! ( இதுவரை வெளியான 9 பாகங்களை விடவும் அதிகம் நகைச்சுவை கொண்ட பாகம் இதுவே -10
* தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற சபையோர் அழைக்கப்பட்டனர். தமிழ்நிலா, ரொபேர்ட் அண்ணா உள்ளிட்ட சிலர் கருத்துக்களைப் பரிமாறினர்
* முன்னதாக கோணல் மாணல் தொடரில் நடிக்கும் கலைஞர்கள் யாவரையும் மேடைக்கு அழைத்து, அங்கு வைத்து அனைவருக்கும் நன்றி சொன்னார் சுதன்ராஜ் அண்ணா. ‘இவர்கள் இல்லாமல் நான் இல்லை’ என்றார். இத்தொடரில் என் பங்களிப்பு 50 வீதம் மட்டுமே..! மிகுதி இவர்கள்தான் என்றார்.!
* கலைஞர்கள் சார்பாக மரியனிட் அக்கா, ஸ்ரீதயாளன் ஆகியோர் உரையாற்றினர். ’நல்ல பாத்திரங்களில் நடித்துவிட்டு, போயும் போயும் காமெடித்தொடரில் நடிக்கப் போகிறாயா?’ என்று சிலர் தனக்கு இன்பொக்சிலே மெசேஜ் போட்டதாக ஸ்ரீ தயாளன் குறிப்பிட்டார்.
* குணா அண்ணாவின் ‘தடம்’ நிறுவனம் தான் இந்த ஒளிவட்டினை வெளியிட்டிருந்தது. அடுத்ததாக பாடல் இறுவட்டு ஒன்றை வெளியிடப்போவதாக, தனது உரையிலே அவர் சொன்னார். தொடர்ந்து தடம் நிறுவனம் மூலம் மேலும் பல கலைப்படைப்புக்களை வெளியிடப் போவதாகவும் சொன்னார்.