இலங்கை சிறைகளுக்கு இன்றுமுதல் STF பாதுகாப்பு!
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றுமுதல் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உப செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று 200 விசேட அதிரடிப்படையினரும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு 100 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நியமிக்கப்படவுள்ளனர்.
ஏனைய சிறைச்சாலைகளில் படிப்படியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதை தடுத்தல், சிறைக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் என்பவற்றை பிரதானமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.