சரஸ்வதி பூஜை கொண்டாடுவது எப்படி?

சரஸ்வதி பூஜை கொண்டாடுவது எப்படி?

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.

முன்பு கிருதயுக காலத்தில் சுகேது என்ற மன்னன் தனது மனைவி சுதேவியுடன் தர்ம நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான்.

அவன் மீது பொறாமை கொண்ட பலர் சூசகமாக படை எடுத்து சுகேது மன்னனை தோற்கடித்து நாட்டை கைப்பற்றிக்கொண்டனர்.

போரில் தோல்வியடைந்த சுகேது மன்னன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்தான்.

அப்போது அங்கிருந்த ஒரு முனிவரை சந்தித்து தனக்கு ஏற்பட்ட நிலையை சொன்னான்.

அந்த முனிவர் நவராத்திரி பூஜையை கடைப்பிடித்து சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி தேவியை வணங்கும்படி கூறினார். அடுத்த ஆண்டே அவர்களுக்கு சூர்யபிரதாபன் என்ற இளவரசன் பிறந்தான். அவன் அனைத்து கலைகளையும் கற்றுத்தேறினான்.

தனது தந்தை இழந்தை நாட்டை மீண்டும் போரிட்டு மீட்டான். பிறகு தனது தந்தையிடமே நாட்டை திருப்பிக்கொடுத்தான். இது தான் சரஸ்வதி பூஜையின் மகிமை.

சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை ஒரு பலகையில் அடுக்கி மஞ்சள் துணியால் பாதி மூடியபடி போர்த்திவிட வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, 3 விளக்குகளை அருகே வைத்து வழக்கமான பூஜை முறைகளை செய்ய வேண்டும்.

சரஸ்வதி தேவிக்கு வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் ஆகியவை பிடிக்கும். ஆகவே இதில் ஏதாவது ஒன்றை தயார் செய்து படைப்பது நல்லது.

தாமரை மலர், அரளி மலர், முல்லைச்சரம் சுற்றி ஏதாவது 3 வகை பழங்களையும் வைத்து, சர்க்கரை பொங்கலுடன் சாமி கும்பிடுங்கள். இதன் பின்னர் பின் வரும் பாடலை பாடுங்கள்.

தூய வெள்ளுடையாய் போற்றி,

துங்க வெண் கமலப்பூவில் மேயினை போற்றி

வெண்மை விரி செப மாலை ஏந்தி

ஆய்தரும் யாழை வாசித்தனைவரும் நலம் பெறச்செய்

தாயுயர் சத்துவஞ்சார் தனித்தெய்வமானாய் போற்றி

இந்தப்பாடலை பாடி முடித்த பிறகு ஓம், ஐம், ஹரீம், ஐம்க்லீம் ஸெளம், ஓம், நமோ பகவதி, சரமேச்வரி மகாத்ரிபுரசுந்தரி, மனோண்மணியை ஸ்வாகா என்ற மந்திரத்தை சொல்லி குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்குங்கள்.

இந்த நாளில் பெரியவர்களிடம் குழந்தைகள் ஆசீர்வாதம் பெறுவது மிகவும் சிறப்பானது.

சரஸ்வதி பூஜையை குடும்பத்துடன் பயபக்தியுடன் மேற்கொண்டால் சகல கல்வி பாக்கியமும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net