ரிஸாட் பதியுதீனை கொலை செய்ய சதி!

ரிஸாட் பதியுதீனை கொலை செய்ய சதி!

அமைச்சர் ரிஸாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இஸ்மாயில், சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகியோர் இன்று காலை, பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று, இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

இந்த சதியை வெளிப்படுத்திய நாமல் குமார, மற்றும் இந்த சதியுடன் தொடர்பு பட்டார்கள் என கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா, பிரான்சில் வசிக்கும் துஸார பீரிஸ் ஆகியோரிடமும் உரிய விசாரணைகளை நடாத்தி, இந்தச் சதியின் பின்னணி பற்றியும், உண்மைத் தன்மையை பற்றியும் வெளிக் கொணருமாறு முறைபாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அது மாத்திரமின்றி அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பிரதி அமைச்சர் அமீர் அலி கூறியதாவது,

இந்த சதி முயற்சியை நங்கள் மிகவும் பாரதூரமாகக் கருதுகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே எடுத்துரைத்துள்ள போதும், அரசாங்கம் அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்தாது இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்ற விடயமும், இன்னுமே துலங்கப்படாத நிலையில், எமது கட்சியின் தலைவர் ரிஸாட் பதியுதீனையும் கொலை செய்து, சமூகங்களுக்கு மத்தியிலே குழப்பத்தை உருவாக்குவதே சதிகாரர்களின் நோக்கம் என்றே புலப்படுகின்றது என்றார்.

 

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net