தந்தை செல்வாவினால் சாதிக்க முடியாததை விக்னேஸ்வரன் புதுக்கூட்டணி அமைத்து சாதிப்பாரா?

தந்தை செல்வாவினால் சாதிக்க முடியாததை விக்னேஸ்வரன் புதுக்கூட்டணி அமைத்து சாதிப்பாரா?

ஈழத்தமிழர்களின் அரசியல் களமானது விடுதலைப்புலிகளின் ஆயுதரீதியான மௌனத்தின் பின்னர் தளம்பல் நிலையினை எட்டத் தொடங்கியிருந்தது.

அரசியல்ரீதியான அதிகாரப்பகிர்வு ஒருபுறம் ஒன்றால் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சனைகள் மறுபுறுத்தில் காணப்பட்டுகின்றன.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் கூட்டிணைக்கப்பட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக தமிழத் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும், விடுதலைப்புலிகளே அரசியல்ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துகூறும் கைங்கரியத்தைச் செய்யவும் என நிகழ்ச்சி நிரல் விடுதலைப்புலிகளினால் வகுப்பட்டிருந்தது.

இந்தவிடயத்தை விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம், 2002 ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் வலியுறுத்தியிருந்தார்.

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் வழிநடத்தலில் தான் செயற்படும். அவர்கள் பிரதானமாகக் கொடுக்கப்பட்ட விடயம் என்னவென்று சொன்னால், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சனையை எடுத்துச் சொல்வது. புலிகளினால் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு வகுப்பட்ட, உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளும், செயற்திட்டங்களும் பல்வேறு விதமாக நலினப்பட்டுக்கு கொண்டு, நலினப்படுத்தப்பட்டுக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பாக இருந்த கட்சிகள், தனிப்பட்ட கொள்ளை, அரசியல் செயற்பாடுகள் மற்றும் அதிருப்தி அரசியல் செயற்பாடுகள், கருத்து முரண்பாடுகள் காரணமாக வெளியிருக்கிறார்கள்.

ஆனந்தசங்கரி ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போதிலும், அவர் விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், ஆர்.சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக விடுதலைப்புலிகளினால் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சங்கரியார் பிரிந்து சென்று தனது தமிழர் விடுதலைக் கூட்டணியை தனிக்கட்சியாக்கி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

இதனையடுத்து 2010 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை உருவாக்கியிருந்தார். இவரின் பிரிவு இவ்வாறு இருக்க, சித்தார்த்தன் தலைமையிலான் புளெட் அமைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டது.

இவ்வாறு புதிய கட்சிகளின் உருவாக்கமும், புதிய அரசியல் பயணங்களும் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்ட மக்களை அவற்றின் பால் ஈர்த்தது. இதனால் கூட்டமைப்பின் வாக்கு வங்கயில் சிறிய சரிவு ஏற்பட்டது.

ஆனாலும் கூட்டமைப்பின் பலம் குறையவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுக்கவில்லை என்று தமிழ் மக்கள் தரப்பு, விமர்சித்தாலும் விடுதலைப்புலிகளின் ஆணையின் பிரகாரம் தொடர்ந்தும் கூட்டமைப்பிற்கு ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

அதுவரை காலமும் வடக்கு கிழக்கில் தனிப் பெரும் கட்சியாக வலம் வந்து கொண்டிருந்த கூட்டமைப்பிற்கு தமிழ் தேசிய மக்களின் முன்னணியின் வருகை சவாலாக அமையாவிட்டாலும் எதிர்காலத்தில் தமது வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்படும் என்ற எண்ணப்பாடு கூட்டமைப்பினருககு இருக்கத்தான் செய்தது.

2013 இல் நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தல் கூட்டமைப்பின் பலத்தை மீண்டும் நிரூபித்தாலும் அது கூட்டமைப்பினருக்கு பலத்த பாதிப்புக்களையும் ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சி சாராத பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு, மாகாணத்தில் அதிபடியான வாக்குகளினால் வெற்றி பெற்றார்.

இதேவேளை பெண் வேட்பாளரான அனந்தி சசிதரன், மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனிப்பெரும் கட்சியாக செயற்பாடுகின்ற போதிலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இதுவரையில் தீர்வுகள் எட்டப்படவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் கூட்டமைப்பிலிருந்து அரசியல் ரீதியாக விலகிய ஈ.பி.ஆர்.எல்.எப், வடக்கு முதல்வரைத் தலைமையாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையை நிறுவி, அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்திருந்தனர்.

ஆனாலும் இந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வேறு வேறு கட்சிகளாக போட்டியிருந்தன. ஆனாலும் அவர்களின் எதிர்பார்க்கப்பட்ட ஆதரவு கிட்டவில்லை.

தென்னிலங்கையில் கட்சித்தாவல் என்றால் வடக்குத் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே புதிய கட்சிகளைத் தோற்றுவிப்பது அரசியல் கலாசாரமாக இருக்கின்றது. 1949 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸிலிருந்து தந்தை செல்வா பிரிந்து சென்று சமஸ்டிக் கட்சியினை நிறுவியிருந்தார்.

அன்று ஆரம்பித்த புதிய கட்சிகளின் உருவாக்கம் இன்றும் தொடர்கின்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சி, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஈழ தமிழர் சுயாட்சிக் கழகம், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளை குறிப்பிட்டுக் கூறலாம்.

கட்சிகளின் தோற்றம் என்பது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கான கட்டமைப்பு ரீதியான அமைப்பு என்று மட்டும் கூறிவிட முடியாது மாறாக கட்சிகள் பிரநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் எதிர்காலம். இவ்வாறு மக்களின் எதிர்கால இருப்பு, அவர்களின் அபிவிருத்தி, அரசியல் அபிலாசைகள் என்பன கட்சிகளின் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் அகப்பட்டுக்கொள்ளும் முதன்மை விடயங்களாக அறியப்படுகின்றன.

உண்மையில் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் மெல்ல மெல்ல அதிகரித்த கட்சி மோதல்கள் இன்று வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை கட்டுப்படுத்துவதாகவும், தமது கருத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிகளிடத்தே பரவலாக இருக்கின்றது.

மறுபுறத்தே கூட்டமைப்பினை தேர்தல்கால கூட்டமைப்பாக மட்டும் வைத்துக் கொண்டிருக்காமல் அதனை அரசியல்கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளினால் வலுவாக வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் பதிவுசெய்வதற்கான எண்ணப்பாட்டில் தமிழரசுக்கட்சி இல்லை.

காரணம் என்வென்று கேட்டால் ஆயுதம் ஏந்திப் போராடிய கட்சிகளை பதிவு செய்தால் எதிர்காலத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என்று தமிழரசுக் கட்சிக்கார்கள் சொல்லித்திரிவதும் யாவரும் அறிந்ததே.

என்னதான் இருந்தாலும் விடுதலைப்புலிகளினால் உருவாக்கிய கூட்டமைப்பு இன்று தட்டுத்தடுமாறிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மஹிந்தவின் காலத்தில் செய்து முடிக்காத காரியங்களை மைத்திரியின் காலத்தில் முடிப்போம். 2015 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தீர்வுகிடைக்கும் என்று சம்பந்தன் தெரிவித்தவை எல்லாம் இன்று வெறும் வார்த்தைகளாகப் போனநிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது.

ராணுவத்தின் வசமிருந்த தமிழ் மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட போதிலும் காணாமல் போனர் விடயம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பில் இன்னமும் காத்திரமான முடிவுகளை கூட்டமைப்பு எடுக்கவில்லை என்ற கோபம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இத்தகைய பின்னணியில் தமிழ் மக்கள் மாற்றுத்தலைமையினை வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். மாறிவரும் ஈழ அரசியல் களம் மற்றும் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அரசியல் அபிப்பிராயம் என்பன விக்னேஸ்வரனை கூட்டமைப்பிலிருந்து பிரித்து தனது கட்சியாக தமிழ் மக்கள் கூட்டணியை நிறுவுவதற்கான களத்தினை அமைத்துக் கொடுத்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி புதிய அரசியல் கட்சியாக அமைந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் களத்தில் ஒரு பலவீனத்தை ஏற்படுத்தப் போகின்றது. ஏற்கனவே தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் வடக்கில் கால் ஊன்ற துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கின்றன. கட்சிகளின் பெருக்கத்தினால் வகுப்படுவது தமிழ் மக்களின் வாக்குகளே அன்றி தீர்வுகள் ஏதுவும் கிடைக்கப் போவதில்லை.

தந்தை செல்வா காலத்தில் தென்னிலங்கையில் மிதமான சிங்கள பௌத்தவாத நிலவியது. அந்தக் காலத்திலே தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது போகவே தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்றைய நிலையில் மோசமான சிங்கள பௌத்தவாதம் நிலவிவருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்வது என்பது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது. உள்ளக அரசியல் செயற்பாடுகள் ரீதியாக தமிழ் மக்களுக்கான தீர்வுகளை எட்ட முடியாது.

தற்போது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை சர்வதேச அரங்கில் இருப்பதினால், சர்வதேச சக்திகளின் அழுத்தங்களினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியமாகும்.

வெறுமனே புதிய கட்சிகளினாலும், இருக்கின்ற கட்சிகளினாலும் தென்னிலங்கையை வசியம் செய்து தீர்வுகளை அடைந்துவிட முடியாது. இன்று விக்னேஸ்வரனின் பின்னால் ஒரு கூட்டம் உள்ளது என்றால் அது கூட்டமைப்பு மீதான கோபம், அதிருப்தி. அவர்களின் செயற்பாடுகள் மோசமடைந்த நிலையிலே புதிய தலைமை குறித்து மக்கள் சிந்திக்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்கின்றவர்கள் தனித்துநின்று எதனையும் சாதிக்கமுடியாது. மாறாக ஒருவர்மீது ஒருவர் சேறுபூசிக்கொண்டே இருப்பார்கள். இது தென்னிலங்கைக்கு இன்னும் வாய்ப்பாகவே போகும். விக்னேஸ்வரன் புத்திஜீவிதான். நல்ல ஆளுமைதான்.

அதற்காக அவரினால் தனித்து சென்று புதிய தேர்தல்கூட்டணி ஒன்றிணை அமைத்துக்கொண்டு தமிழர் அரசியல் களத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியாது என்பது அரசியல் ஆய்வாளர்களின் வாதம்.

எனவே விடுதலைப்புலிகளின் நோக்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என்பதே. கூட்டமைப்பினர் தம்பக்கமுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல ஏனைய கட்சிகளும் கட்சி அரசியல் நலனில் அக்கறை காட்டாது தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஓரணியாக இணைந்து பயணிப்பதே காலத்தின் கட்டாயமாக உணரப்படுகின்றது.

தலைமைக்கான போராட்டத்தினால் தலைவர்கள் மிஞ்சுவார்கள், அவர்களின் மக்கள் மிஞ்சமாட்டார்கள். மக்களுக்கான அரசியல் செய்பவர்கள், அந்த மக்களின் இருப்பை கவனத்தில் கொண்டு அரசியல் செய்வதே இன்று ஈழத்தமிழருக்கு அதி உயர்ந்த தேவையாகவுள்ளது.

-பா.யூட்-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net