இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை!

இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக, அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன.

இலங்கைப் பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறும் சாத்தியம் உள்ளது.

அமைதியான நோக்கில் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட, மோதலாக மாறவோ, வன்முறைகள் அதிகரிக்கவோ கூடும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகம் நினைவுபடுத்துகிறது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் மற்றும் பெரியளவில் கூட்டங்கள் நடக்கும், இடங்களில் இருந்து விலகி, கவனமாக இருத்தல் வேண்டும்.

இலங்கை முழுவதுக்குமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, இத்தகைய கூட்டங்கள், அலரி மாளிகை, நகர மண்டபம், லிப்டன் சதுக்கம், லிபர்ட்டி சுற்றுவட்டம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களே அதிகளவில் இடம்பெறலாம்.

இத்தகைய கூட்டங்கள் கூடும் இடங்களை தவிர்த்து அவதானமாக இருக்க வேண்டும். உள்ளூர் ஊடகங்களை கவனித்து, உங்களைச் சுற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Copyright © 8261 Mukadu · All rights reserved · designed by Speed IT net