சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார்!

சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார்!

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதும் இணைந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க,

எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும்.

அரசியலமைப்பில் தனிப்பட்ட பாரபட்சங்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாரளுமன்றமே அதிஉயர் அதிகாரங்களை கொண்டது இதனையே சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது.

அவர்களிற்கு போதிய பெரும்பான்மையில்லாததன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அவர்கள் தயங்குகின்றனர்.

பாராளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது எனக்கு கவலையளிக்கின்றது. இதன் காரணமாக நாடு மேலும் ஸ்திரமின்மையை நோக்கி தள்ளப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையயை நிரூபித்த பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு,

புதிய அமைச்சரவையை அறிவிக்கவேண்டியிருக்கும். முன்னைய அமைச்சரவையில் இருந்த பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்து கொண்டுள்ளனர்.

புதிய பிரதமர் நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையே தொடர்கின்றது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் அவர்கள் தமது பெரும்பான்மையை நிருபிக்க தவறினால் அந்த நிலையே தொடரும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அந்த கேள்வி முடியுமுன்னரே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனப் பதிலளித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net