நாடாளுமன்றத்தை கலைக்க காரணம் என்ன?

நாடாளுமன்றத்தை கலைக்க காரணம் என்ன? புலனாய்வு தகவலால் அதிர்ச்சி அடைந்த மைத்திரி – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையே இதற்கு காரணம் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் வாக்கெடுப்பை புறக்கணித்து மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் அமைச்சு பதவியில் இருந்து விலகவிருந்ததாக புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற அறிக்கை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இதற்கான கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

இதுவரையில் அதற்கான ஆவணங்கள் தயாரித்து கொண்டிருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலத்தின் பிரதிநிதி ஒருவர் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தன்னிடம் வந்ததாக பசில் ராஜபக்ச கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த துமிந்த – மஹிந்த அமரவீர குழுவினரின் ஆதரவு பெற்றுக் கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமையும் ஒரு காரணமாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு துமிந்த திஸாநாயக்க வீட்டில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த – பசில் உட்பட 20க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தின் போது உரிய முறையில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி, நேற்று பிற்பகல் பசில் மற்றும் மஹிந்தவை அழைத்து புலனாய்வு பிரிவு அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தங்களுக்கு ஆதரவு 68 பேர் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் நாடாளுமன்றத்தை கலைப்பதனை தவிர வேறு வழியில்லை என குறித்த 3 பேரும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net