பிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது!
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளபோதும், நாடாளுமன்ற சம்பிரதாயங்ளுக்கு அமைய அது அவசியமற்றதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டு, உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்தார். அதற்கு அனுப்பிவைத்த பதில் கடிதத்திலேயே ஜனாதிபதி இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சபாநாயகரின் செயற்பாடு அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக நாடாளுமன்ற நிலையியல் கட்டளை மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறி சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என்றும், நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்படாத ஆவணமொன்றை தனக்கு அனுப்பிவைத்துள்ளமை குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி மைத்திரி தனது பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.