நிலையான அரசாங்கத்தை தீர்மானிக்கும் நாள் நவம்பர் 23!
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையில், யார் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதென்ற குளறுபடி நீடிக்கின்றது.
இதற்கு, எதிர்வரும் 23ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தீர்வு கிடைக்குமென தமிழ் முற்போக்கு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று (திங்கட்கிழமை) 7 நிமிடங்களே இடம்பெற்றது. இது தொடர்பில் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த திலக்ராஜ், குறைந்த நேரத்தில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றாலும் நாடாளுமன்றை சுமூக நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையாகவே அமைந்ததென குறிப்பிட்டார்.
அத்தோடு, நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை அமைப்பது தொடர்பாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டதென்றும், 23ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது நிலைமை மேலும் சீரடையும் என்றும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி எழுத்துமூலமான நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் நாடாளுமன்றம் கூடும் என்றும் அன்றைய தினம் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.