அவுஸ்ரேலியாவில் புழுதி புயலை தொடர்ந்து காட்டுத்தீ அபாயம்!
அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் மணித்தியாலத்திற்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் புழுதிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பொதுமக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 70 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த புழுதிப்புயல் வீசி வருவதால், சில இடங்களில் காட்டுதீயும் பரவ தொடங்கியுளள்ளது.
சிட்னி முதல் 500 கிலோமீற்றர் பரப்பளவுக்கு இந்தப் புழுதிப்புயல் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல், அவுஸ்ரேலியா கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புழுதி புயலால் மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், பொதுமக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புழுதி புயலால் சிட்னி உள்ளிட்ட பிரதான நகரங்களில் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இதனால் மக்கள் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் விமான நிலையங்களிலேயே தங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் புழுதி புயலால் இதுவரையில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது சேத விபரங்களோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.