பிரதமர் பாதுகாப்பு பிரிவின் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரத்து!
பிரதமர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, பொலிஸ் மனித வள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் கையொப்பத்தில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
24ம் திகதி வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு நேற்று அதாவது 24 மணித்தியாலங்களுக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், மகளிர் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ட்கள், பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள், மகளிர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 500 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இடமாற்ற உத்தரவு தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை தேவை கருதி இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக முன்னதாக வெளியிடப்பட்ட இடமாற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சேவை தேவை கருதி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக ரத்து செய்யப்பட்ட உத்தரவிலும் குறப்பிடப்பட்டுள்ளது.