பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் பாய்கின்றது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை காலை 9.57 மணிக்கு விண்ணில் பாய்கின்றது.

இந்த ரொக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில்,

விண்வெளியிலிருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்’ செயற்கைகோள் பூமியிலிருந்து 636 கிலோ மீற்றர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீற்றர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளன.

பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ஆம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீற்றர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் 230.4 டொன் எடை கொண்டதாகும்.

மேலும் இந்தியாவின் 45ஆவது பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று காலை 5.57 மணிக்கு தொடங்கியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net