ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல்!
தனியார் நிறுவனமொன்றில் பங்குதாரராக இருந்துகொண்டு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை தடுக்கும் வகையில் கோ வொறன்டோ நீதிப் பேராணைக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![](https://www.mukadu.com/wp-content/uploads/2018/12/ranil_wickramasinghe_2.jpg)
நீதிக்கான பெண்கள் அமைப்பின் இணைத் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஷர்மிலா கோனவல இம்மனுவை நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாகவே இம்மனுத் தாக்கலை அவர் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுவில் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பின் சட்ட பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவாராயின் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர்.
ஆனால் ரணில் லேக்கவுஸ் குழுமத்தின் பங்குதாரர் உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவர் அக்குழுமத்தின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனத்தின் ஊடாக இலங்கை வங்கி மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தத்த்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளார்.
ஆகையால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிருந்து நீக்கவேண்டும் என்பதுடன் குறித்த மனுவுக்கான தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் அவர் குறித்த மனுவின் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.