இருவேறு ரயில் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

இருவேறு ரயில் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதியதிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

கதுருவெல – கல்லேல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மீர் என்ற 17 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஆதம் லெப்பே என்பவரே இந்த விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net