யாருடன் யார் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவர்!

யாருடன் யார் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவர்!

என்னை பற்றி குறைகூறும் மகான்கள் யோக்கியமானவர்களா? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுடன் இணைந்து கொள்ள பணம் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுவது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

“நான் மஹிந்தவோடு இணைந்து கொண்டேன் என்று கூறுகின்றவர்கள் முதலில் அதனை நிரூபிக்க வேண்டும். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து அவர் தலைமையிலான அமைச்சரவையிலேயே அங்கம் வகித்தேன்.

இதை எங்கள் பகுதி பாமரனும் புரிந்து கொள்வார். உண்மையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியும் ஜனாதிபதிக்கு கீழ் தான் இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஏதாவது வாங்கினால் நிரூபியுங்கள். அல்லது அவருடன் அவரது கட்சியில் இணைந்திருந்தால் அதையும் நிரூபியுங்கள். ஆரம்பத்தில் ஐம்பது கோடி என்றார்கள். தற்போது ஐந்து கோடி என்கிறார்கள். என் வீட்டு நாய்க்கும் அந்த எண்ணம் இல்லை.

அரசியலுக்கு வந்த பிறகும் தொழில் செய்தே நாங்கள் வாழ்கிறோம். முன் கதவால் சென்று பதவி பெற்றது உண்மை. அது ஒரு வேளை கையூட்டாகத் தெரியலாம். அது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே!

இவ்வாறு என்னை நோக்கி கைநீட்டுபவர்கள் கடந்த காலங்களில் தாங்கள் சந்தித்த விமர்சனங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் தங்களை சுய பரிசோதனையும் செய்ய வேண்டும்.

என்னை துரோகி என்று கூறுமளவிற்கு நான் யாரையும் காட்டியும் கொடுக்கவில்லை. யாரையும் கடத்தவுமில்லை.

யாரையும் கொல்லவுமில்லை. யாரையும் துஷ்பிரயோகம் செய்யவுமில்லை. என் இனத்தின் நிலத்தையும் வளத்தையும் காட்டிக்கொடுக்கவுமில்லை. கிழக்கில் ஒரு தலைமைத்துவம் வந்தால் சிலர் இலகுவாக துரோகி பட்டம் வழங்கிவிடுவது இயற்கையாகிவிட்டது.

தயவு செய்து புண்ணியம் கிடைக்கும் பிரதேசவாதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சில ஊடகங்கள் வாயிலாகவோ வளர்த்து விடாதீர்கள் . எம் கிழக்குத் தமிழ் மக்களை பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் எவ்வாறும் செல்லத்தயார்.

என்னை இன்னும் சிலரோடு இணைத்து மஹிந்தவோடு சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காரணம் என் சமூகத்தை சேர்ந்தவர் அவர் இல்லை. இருந்தாலும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

அதன்படி, அவ்வாறு மஹிந்தவிடம் இருந்து எதையாவது பெற்று இருந்தால் அதை நிரூபிக்கலாம். இவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தன்னை நல்லவன் போல வெளிக்காட்ட முனைகிறார்.

அத்துடன் அவர் கடந்த காலங்களில் ஊடங்களால் எப்படி பேசப்பட்டார். அவருடைய மகன் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. என்பதை அவர் சார்ந்த மக்கள் அறிவார்கள்.

மேலும், என்னைப் பற்றியும் என்னுடைய நடவடிக்கை பற்றியும் விமர்சிக்கும் சிலர் முதலில், உங்கள் சார்ந்த மக்கள் மீது நீங்கள் என்ன செய்து இருக்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு மனசாட்சி இருக்குமாக இருந்தால் அந்த மனசாட்சியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்த வந்தோம் என நினைத்து போட்ட தாளத்தை திரும்ப திரும்ப போட வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net