வீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

வீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

இலங்கையில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாக சபை நியமிக்கப்படவுள்ளமைக் குறித்து சர்வதேக கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழுவிடமிருந்து அனுமதி கிடைக்கும்வரை காத்திருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அதி சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள் அனுபவிக்கும் துயரங்களை, கஷ்டங்களை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் வகையில் குறைகேள் அதிகாரி ஒருவரை நியமிக்கவுள்ளேன்.

விளையாட்டு வீர, வீராங்கனைகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

அது மட்டுமல்லாமல் வீர, வீராங்கனைகள் எதிர்நோக்கும் அநீதிகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு நியாயம் வழங்கும் வகையில் தொலைபேசி அழைப்பு நிலையம் ஒன்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நிறுவப்படவுள்ளது.

பல வீர, வீராங்கனைகள் தங்களுக்கு அநீதி ஏற்படும்போது ஊடகங்களை அணுகி தங்களது குறைகளைக் கூறுவதைவிடுத்து விளையாட்டுத்துறை அமைச்சில் அமைக்கப்படவுள்ள தொலைபேசி அழைப்பு நிலையத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது பிரச்சினைகளை, தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை அறிவிக்க முடியும்.

இதனைமுன்னிட்டு 1978 என்ற தொலைபேசி எண் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த நிலையத்தில் ஐவர் நியமிக்கப்படவுள்ளனர்.

குறைகேள் அதிகாரி, தொலைபேசி அழைப்பு நிலைய அதிகாரிகள் ஆகியோர் புதன்கிழமைகள் தோறும் 3 மணி நேரம் கலந்தாலோசித்து குறைகள் மற்றும் அநீதிகளுக்கு தீர்வு காண உதவுவர்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © 0939 Mukadu · All rights reserved · designed by Speed IT net