புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்!
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் (புதன்கிழமை) நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தினை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். அம்மக்களின் அபிலாஷைகள் இனங்காணப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனநாயகத்துக்காகத் தம்மை அர்ப்பணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ரீதியான கோரிக்கைகளை புதிய அரசமைப்பின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் தற்போது வறட்சியும், வெள்ள அனர்த்தமும் என இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுவருகின்றன.
அப்பகுதி முன்னேற்றத்துக்கு இதுவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. எனவே, அரசாங்கம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என வேலுகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.