அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்!
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதன்படி விசேட பிராந்தியங்கள் வேலைத்திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக அப்துல்லாஹ் மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் தயா கமகேவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலுவூட்டல் அமைச்சராக தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.



