இலங்கையில் அமெரிக்க வானொலி வலையமைப்பு!
இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அமெரிக்க படையினர், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்தகார்களின் பயன்பாட்டுக்காக வானொலி வலையமைப்பை நடத்தி செல்ல இலங்கை அரசாங்கம் இடமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை சம்பந்தமான இரகசிய ஆவணம் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கைக்கு வரும் அமெரிக்க விமானங்கள், கப்பல் துறைமுக கட்டணங்களோ வேறு கட்டணங்களோ அறவிடப்பட கூடாது என அமெரிக்க தூதரகம் யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அமெரிக்க படையினர் சுதந்திரமாக எந்த இடத்திற்கு செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு தனியாக தொடர்பாடல் கட்டமைப்பை ஏற்படுத்தவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக இலங்கை அரசும், அமெரிக்க அரசும் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.