மெக்ஸிகோவில் எரிபொருள் குழாய் வெடிப்பு – உயிரிழந்தவர் 66 ஆக அதிகரிப்பு!

மெக்ஸிகோவில் எரிபொருள் குழாய் வெடிப்பு – உயிரிழந்தவர் 66 ஆக அதிகரிப்பு!

மத்திய மெக்ஸிகோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோவில் குழாய் மூலம் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய எரிபொருளை பொதுமக்கள் சேகரித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக திடீரென எரிபொருள் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 20 பேர் உயிரிழந்ததுடன், 54 பேர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், மெக்ஸிகோவில் எரிபொருள் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஹிடால்கோ மாநில ஆளுநர் ஓமர் பயாத் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Copyright © 8887 Mukadu · All rights reserved · designed by Speed IT net