இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன்.

அன்று என் கன்னத்தில் அறைந்த பொலிஸார்!

இலங்கையை பிடிக்க முயற்சித்த முன்னாள் தமிழக முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டு தான் சிறையில் அடைக்கப்பட்டதாக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் இருந்ததாகவும் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அடி வாங்கியதாகவும் ஜனாதிபதி தனது பழைய கால நினைவுகளை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன்.

ஒரு முறை எம்.ஜி.ஆர். நாட்டை பிடிக்க வருவதாக கூறி எம்.ஜி.ஆரின். திரைப்படம் பொலன்னறுவை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் அங்கு சென்று தகராறு செய்தோம். அவரது திரைப்படங்கள் இங்கு ஓட கூடாது என்று சண்டை பிடித்தோம். இதன்போது அங்கு வந்த பொலிஸார் மீது சிலர் கல்லெறிந்தனர்.

அச்சம்பவத்தில் அங்கு நானும் இருந்தேன். கல்லெறிந்தவர்கள் ஓட நான் சிக்கிக்கொண்டேன். இதனால் பொலிஸார் என்னை அந்த வேளையில் முதன் முறை கன்னத்தில் அரைந்து மூன்று மாதங்களுக்கு சிறையிலடைத்தனர்.

பின்னர் மீண்டுமொரு முறை 1980 சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த வேளையில் நான் பொலன்னறுவை வீதியில் இறங்கி போராடினேன்.

இதன்போது ஒரு நாள் முழுவதும் வீதியை மறித்து வீதியிலேயே படுத்து கிடந்தோம். இதன்போது பொலிஸார் என்னை அடித்து இழுத்துச் சென்றனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே நான் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவன் பொலிஸ் நிலையத்தை தாக்கத் திட்டம் தீட்டியுள்ளேன் என கூறி கைது செய்து கொலை செய்ய முயற்சித்து பின்னர் என்னை நீதிமன்றம் முன் நிறுத்தி ஒன்றரை வருடங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார்கள்.

பொலிஸாரிடமிருந்து நான் இறந்து பிறந்தே இன்று ஜனாதிபதியாகியுள்ளேன். என்றாலும் எனக்கு ஒருபோதும் பொலிஸாரின் மீது வன்மம் எழவில்லை.

ஏனென்றால் அவர்களில் நல்லவர்கள் தீயவர்கள் என இருத்தரப்பினரும் உள்ளனர் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Copyright © 0283 Mukadu · All rights reserved · designed by Speed IT net