ஊழலில் இருந்து தப்பிக்கவே ஐ.தே.க. தேசிய அரசாங்கத்தை அமைத்தது!

ஊழலில் இருந்து தப்பிக்கவே ஐ.தே.க. தேசிய அரசாங்கத்தை அமைத்தது!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊழல் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்தை அமைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமஷ்டி அரசியலமைப்பொன்றை கொண்டுவரவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் தான் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது அச்சத்தில் தான் உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக விசாரணைகள் இடம்பெறுமாக இருந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவருக்கும் களமிறங்க முடியாது போய்விடும்.

இதனாலேயே, மீண்டும் ஜனாதிபதியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகிறது.

மேலும், அரசியலமைப்பு தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க தற்போது அதிகமாக பேசி வருகிறார். ஒற்றையாட்சி எனக்கூறி சமஷ்டி யாப்பை ஸ்தாபிக்கவே இவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தன்மை இருப்பதாக சம்பந்தனே கூறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சி தான் எனக் கூறிக்கொண்டு வருகிறார்.

இப்படியான கட்சியொன்றுடன் இணைந்து மீண்டும் ஜனாதிபதி, தேசிய அரசாங்கம் ஒன்றை ஒருபோதும் ஸ்தாபிக்க மாட்டார்” என ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net