ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தோட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுவது பொய்யான விடயமாகும். குறித்த நிறுவனங்களுக்கு போதிய இலாபம் கிடைக்கின்றது.
இதனை அவர்கள் மறைத்து பொய்யான கணக்குகளைக் காண்பித்து தொடர்ந்தும் தோட்ட மக்களை அந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.
தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான விடயம் நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசங்கத்தில் இணைந்துள்ள சில தமிழ்க் கட்சிகளும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.