தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்!
தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை போன்று மாகாண சபைத் தேர்தலும் தள்ளிப் போனதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் நேற்று புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சாதாரணமாக நாங்கள் கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதில்லை.
தேர்தல் நடத்தப்பட வேண்டிய நேரத்தில் நடக்கும். தேர்தல் முறை மாற்றம் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் தள்ளிப்போனது. எனினும் தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை பெற்ற கைதிகளின் பெயர் பட்டியலை அனுப்பும் பொறுப்பை நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கே வழங்குவோம். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடாக 48 பேரின் பெயர் பட்டியல்களை பெற்றோம். அவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.
ஏனைய 18 பேரின் அனைத்து விடயங்களை தேடிப்பார்த்து, அவர்கள் கட்டாயம் மரண தண்டனையை நிறைவேற்ற தகுதியானவர்களா என்பதை ஆராய்ந்து, அது தொடர்பான அறிக்கையின் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.