இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு!

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு!

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச, அரச சார்பு , தனியார்துறை நிறுவனங்களினால் அல்லது தனி நபர் ஒருவரினால் பயன்படுத்தும் சகல இயந்திர வாள்களும் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதிப்பத்திரத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் மரம் வெட்டும் இயந்திரங்களை அடையாளம் காண்பதற்காக விசேட அனுமதி பத்திரம் மற்றம் இலக்க தகடும் வழங்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இத்தீர்மானத்தின் நோக்கம் காடுகள் அழிக்கப்படுவதனை கட்டுப்படுத்தல், இயந்திர வாள்களைப்பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபாரத்தை நிறுத்துதல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதனை மட்டுப்படுத்துதல் போன்றவைகளாகும்.

பதிவு நடவடிக்கைகள் 2019 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமானதுடன் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையிலேயே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net