சிறீலங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படங்கள் ஜெனிவா முன்றலில்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஆறாவது நாள் நடைபெறும் நிலையில் ஜெனிவா முன்றலில் 2013ம் ஆண்டு தொடக்கம் தமிழினப்படுகொலை சாட்சிய நிழற்படங்களை ஜெனிவா முன்னறலில் வைத்து சர்வதேசத்திடம் சர்வதேச விசாரணையும் நீதியும் கோரும் மனித உரிமைப்போராளி கஜன் இம்முறையும் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் ஜெனிவா முன்றலில் தமிழினப்படுகொலை நிழற்படங்களை வைத்திருக்கின்றார்.
இந்நிழற்படங்களில் சிறீலங்காவில் கடந்த 71 ஆண்டுகளாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பலரின் நிழற்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.இதுவரை சிறீலங்காவில் 43 ஊடவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 35பேர் தமிழ் ஊடவியலாளர்கள் ஏனையோர் ஐந்து சிங்களவர்களும் 3 முஸ்லிம்களும் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜேஆர் ஜெயவர்த்தனா காலத்தில் 1ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாசா காலத்தில் 2ஊடகவியலாளரும் சந்திரிக்கா பண்டாரநாயக்கா காலத்தில் 13 ஊடகவியலாளரும் மகிந்தராஜபக்ச காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் சிறீலங்காவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.இந்தப்படுகொலைகளுக்கு இதுவரை முறையான நீதி விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களான ஜோசப்பரராஜசிங்கம் அரியநாயகம் சந்திரநேரு சிவநேசன் ரவிராஜ் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் பேசப்படும் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் உள்ளிட்டவர்களின் நிழற்படங்களும் காணப்படுகின்றன.