யாழிலிருந்து கொண்டுவரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் கைது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான குறித்த வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போதே 40 வயதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இந்த வலம்புரி சங்கு, லயன் அறை ஒன்றில் உள்ள அரிசி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பொதுவான நபர் ஒருவரை அனுப்பி, இந்த வலம்புரி சங்கை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.